உ.பி.யில் முதல் அடி கொடுக்கப்பட வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

உ.பி.யில் முதல் அடி கொடுக்கப்பட வேண்டும்!

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு 2022-இல் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், ஏபிபி - சிவோட் டர் நிறுவனங்கள் இணைந்து, குறிப்பிட்ட இடைவெளியில் கருத்துக் கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், லக்கிம்பூர் கெரி படுகொலைக்கு முன்பு நடந்த கருத்துக் கணிப்பில் கிடைத்த இடங்களைக் காட்டிலும், படு கொலைக்கு பின்னர் நடந்த கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 20 இடங்கள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில், கடந்த 2017-இல் நடந்த தேர்தலில் 325 தொகுதி களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. 41.4 சதவிகிதம் அளவிற்கான வாக்குகளையும் பாஜக பெற்றிருந்தது. இந்நிலையில், 2022-இல் நடைபெறும் தேர்தலில் பாஜக-வுக்கு 41.8 சதவிகிதம் வாக்குகள் கிடைத்தாலும், சுமார் 60 இடங்கள் வரை குறையும்.. 259 முதல் 267 இடங்கள் வரையே கிடைக்கும் என ஏபிபி-சிவோட்டர் நிறுவனங்கள், கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் கூறியிருந்தன.

இதனிடையே, சமீபத்தில் நடத்தப்பட்ட ஏபிபி - சிவோட்டர் கருத்துக் கணிப்பில், பாஜக-விற்கு கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கை 241 முதல் 249 ஆகக் குறைந்துள்ளது. லக்கிம்பூர் கெரியில், ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா விவசாயிகள் 4 பேரை காரை ஏற்றி படுகொலை செய்த சம்பவத்திற்குப் பிறகு 20 இடங்களை இழந்திருப்பதாக ஏபிபி - சிவோட்டர் தெரிவித்துள்ளது. 2017 தேர்தலில் கிடைத்ததை விட 2022-இல் பாஜகவுக்கான வாக்கு சதவிகிதம் 41.4 சதவிகிதத்திலிருந்து 41.8 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கூறப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் அது 0.5 சதவிகிதம் குறைந்துள்ளது. தற்போது பாஜகவுக்கு 41.3% வாக்கு கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள் ளது.

லக்கிம்பூர் கெரி படுகொலைக்குப் பிந்தைய கணிப்பில் பாஜக 20 தொகுதிகளை இழக்கும் நிலையில், அந்த 20 தொகுதிகளை சமாஜ்வாதி கைப்பற்றும் எனவும் கணிக்கப்பட் டுள்ளது. வரும் தேர்தலில் சமாஜ்வாதிக்கு 130 முதல் 138 இடங்கள் வரை கிடைக்கும். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு முன்பை விடக் குறைவாக 15 முதல் 19 இடங்களும், காங்கிரசுக்கு 3 முதல் 7  இடங்களும் கிடைக்கும் என்று ஏபிபி - சிவோட்டர் கணித்துள்ளது. லக்கிம்பூர் கெரி படுகொலை விஷயத்தில், ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் மீதான குற்றச் சாட்டு உண்மையென 61 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 39 சதவிகிதத்தினர் மட்டுமே இல்லை என்று கூறியுள்ளனர். பொதுவாக லக்கிம்பூர் சம்பவத்தால் பாஜகவிற்கு இழப்பு ஏற்படும் என்றும் 70 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.

.பி.யில் லக்கிம்பூர் கொடூரத்தால் பிஜேபியின் சங்பரிவார் களின் உண்மை முகம் - இதுவரை அவர்களைப்பற்றிய உண் மைகளை அறியாத மக்கள் மத்தியிலும் சென்றடைந்துள்ளது.

பிஜேபி  தலைமையேற்கும் ஒன்றிய அரசு என்பது எல்லா வகைகளிலும் தோல்வி அடைந்த வெகு மக்கள் விரோத அரசாகும்.

ஆண்டுக்கு ஒரு கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று வாண வேடிக்கை உறுதிமொழி எல்லாம் கொடுத்துதான் ஆட்சிக்கு வந்தது பிஜேபி.

உண்மை என்னவென்றால் ஏற்கெனவே இருந்து வந்த வேலைகளையும் இழந்து வீதியில் நிற்கும் கையறு நிலைதான் நாளும் நாளும்.

மக்கள் நல அரசு என்ற நிலையிலிருந்து வெகு தூரம் பயணித்து இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

எந்த அளவுக்குப் போய்விட்டது என்றால் தனியார்த் துறையை ஊக்கப்படுத்துவதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசின் கொள்கை என்று ஒளிவு மறைவு இல்லாமல் ஓங்கி அடித்துச் சொல்லும் அளவுக்கு ஒன்றிய பிரதமர் வெளியில் வந்து விட்டார்.

இன்னொரு முறையும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது - தாங்கவே தாங்காது! பாசிசம் பச்சையாக நிர்வாணக் கூத்தாடும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

மக்கள் நலன் கருதி எதிர்க்கட்சிகள், தங்களுக்குள் உள்ள மாறுபாடுகளையும், வேறுபாடுகளையும் தூர ஒதுக்கி வைத்து விட்டு, ஓரணியில் நின்று ஒன்றுபட்டு கூட்டணி வைத்து நாட்டைப் பீடித்த இந்த நாசகார ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

.பி. தேர்தல் அதற்கு எடுத்து வைக்கும் கம்பீரமான முதல் அடியாக அமைய வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் எதிர்க்கட்சிகள் வரலாற்றில் பெரும் பழியைச் சுமக்க நேரும் என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டியது மக்கள் நலக் கண்ணோட்டத்தில் நமது கடமையாகும்!

No comments:

Post a Comment