புதுடில்லி, அக்.9 ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடிக்கு டாடா குழுமம் வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியஅரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
எனினும் கடன் சிக்கலால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. மேலும் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் மேலும் சிக்கலுக்குள்ளானது.
தொற்று பாதிப்பு குறைந்த பிறகு கடந்த ஏப்ரல் மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தியது. ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்கு செப்டம்பர் 15ஆம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து, ஏல விவரங்களைஒன்றிய அரசுக்கு அளிக்கப்பட்டது.
டாடா குழுமம் அளித்த ஏல விவரங்களை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில், 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா தனியார்மயமானதை ஒன்றிய அமைச்சர்கள் குழு உறுதி செய்ததாக மத்திய அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்வா?
எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை
பெங்களூரு, அக்.9 கருநாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர் உள்பட கருநாடகாவின் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில், 300-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருநாடக முதல்வராக எடியூரப்பா பதவி வகித்த காலத்தில் ஏராளமான ஊழல்கள் நடைபெற்று வந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். குறிப்பாக கருநாடக நீர்ப்பாசனத்துறை திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், அதன் மூலம்,எடியூரப்பாவின் உதவியாளர் உமேஷ் கோடிக்கணக்கில் கையூட்டு பெற்று, ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்ததாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த முறைகேட்டில், எடியூரப்பாவின் மகன்களுக்கும் பங்கு இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், எடியூரப்பாவுக்கு நெருக்க மானவரான உமேஷ் வீடு உள்பட ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள், ஆடிட்டர்களின் வீடுகள், அலுவ லகங்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment