புதுடில்லி நவ.3 மோடி அரசு ஒன்றிய அரசு மத அரசியல் செய்கிறது; ஏழைகளைப் பற்றி கவலைப்படுவது இல்லை என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேனாள் ஒன்றியஅமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கபில்சிபல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, மதவாத அரசியல் மட்டுமே செய்து வருகிறது. ஏழைகளை பற்றி கவலை கொள்வதில்லை எனவும், எரிபொருட்களின விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், ஏழைகளின் வருமானம் உயர்ந்து இருப்பதாக பாஜக கூறி வருகிறது. ஒருவர் மாதம் ஒன்றிக்கு 6ஆயிரம் சம்பாதித்த நிலையில், தற்போது மாதம் இருபத்தைந்தாயிரம் சம்பாதிப்பதாக பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இதைர மிகவும் கொடூரமான ஒரு காமெடி என்று கூறியவர், ஒருவேளை பாஜக மற்றும் அந்த கட்சியை சார்ந்த தலைவர்களின் வருமானம் உயர்ந்திருக்கக்கூடும், ஆனால், பொதுமக்களின் வருமானம் உயரவில்லை, மாறாக எரிபொருள் விலையும், சமையல் எரிவாயு உருளை விலையும் தான் உயர்ந்து வருகிறது, பாஜக தலைவர்கள் உண்மையான உலகத்தில் இல்லை என குற்றம் சாட்டினார்.
மேலும், பிரியங்கா காந்தி வதேரா ஏற்கெனவே உ.பி.யில் காங்கிரசுக்கு இழந்த இடத்தைக் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
அதை கோரக்பூரில் நடந்த காங்கிரஸ் பிரதிக்யா பேரணியில் பேசிய பிரியங்கா இக்கட்டான காலங்களில் மக்களுடன் காங்கிரஸ் மட்டுமே துணை நிற்கும் என தெளிவுபடுத்தி இருக்கிறார் என்று கூறியவர், பாஜக அரசை மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள், அதற்கான அச்சாரம் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் தொடங்கும் என்றும், தனக்கு அதன்மீது நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.
பா.ஜ.க. மீது மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்
கருநாடக மாநில தலைவர் டி.கே.சிவக்குமார்
பெங்களூரு, நவ.3 மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் பாஜக மீது மக்கள் கோபமாக உள்ளனர். அதன் எதிரொலிதான் கருநாடக மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி கிடைத்துள்ளது என ஹனகல் தொகுதி காங்கிரஸ் வெற்றி குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறினார்.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் காங்கிரசும், மற்றொரு தொகுதியில் பாரதியஜனதா கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநில தலைவர் டி.கே.சிவகுமார், மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் பா.ஜனதா ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் அனைவரும் கோபத்தில் உள்ளனர். அதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவே சாட்சி. கடந்த சட்டசபை தேர்தலில் சிந்தகியில் காங்கிரசுக்கு 3ஆவது இடம் தான் கிடைத்தது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
2 தொகுதிகளிலும் காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. கருநாடகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம். இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் உறுப்பினர் சீனிவாஸ் மானே கடந்த முறை 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த முறை அவர் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசு உள்ளது. அத்துடன் ஹனகல் தொகுதி முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது. அனைத்து வகையிலும் பா.ஜனதாவுக்கு சாதகமான சூழல் இருந்தாலும் ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. பா.ஜனதா வெற்றி பெற்ற தொகுதியை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment