திருச்சி, டிச.4 பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு திராவிட மாணவர் போராட்ட தினம் மற்றும் உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சிகள் கல்லூரி அரங்கத்தில் 01.12.2021 அன்று நடைபெற்றது.
முன்னதாக பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்
இரா. செந்தாமரை தலைமையில் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் அவர்கள் முன்னிலையில் திராவிட மாணவர் கழகத்தில் 253 பேர் உறுப்பினர்களாக இணைந்தனர்.
திராவிட மாணவர் கழகத்தின் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அனைவரும் உறுதிமொழியேற்றனர். முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற தொண்டறப்பணிகளை, சமுதாயப்பணிகளை தமிழர் தலைவர் தலைமையில் நிறைவேற்ற கடமை, கண்ணியம் போன்றவற்றை பின்பற்றுவதுடன் கட்டுப்பாடு மிக்க மாணவர் சேனையாக பெரியார் மருந்தியல் கல்லூரி திராவிடர் மாணவர் கழகம் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஜெய்பீம் திரைப்படம்
அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூகநீதி அதனை நிலைநாட்ட ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்பதனை அய்யா அவர்களின் பிறந்தநாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரானதும் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாகவும் பேசப்படும் ஜெய்பீம் திரைப்படம் திரையிடப்பட்டது.
உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு நாள்
அதனைத்தொடர்ந்து மாலை 3 மணியளவில் உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு நாள் சிறப்புக்கருத்தரங்கம் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் நடைபெற்றது. நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்
அ. ஜெயலெட்சுமி வரவேற்புரையாற்றினார். திருச்சி எச்.அய்.வியுடன் வாழ்வோர் கூட்டமைப்பின் இயக்குநர் ஏ. தமிழ் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் சிறப்பாக எடுத்துரைத்துரைத்தார். மேலும் உயிர்க்கொல்லி நோயாக இருக்கக்கூடிய இந்நோய்க்கு மருந்தியல் ஆராய்ச்சியினை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளினை விடுத்து சிறு குழந்தைகளும் இந்நோயினால் பாதிக்கப்படும் அவலநிலை தொடர்ந்து வருவதாக உரையாற்றி ஒளிப்படக்காட்சிகள் மூலம் விளக்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் முன்னிலை வகித்தார்.
நிறைவாக பெரியார் நலவாழ்வு சங்கத்தின் செயலர் கே.ஏ.எஸ். முகமது ஷபீஃக் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment