அடிமை மாக்கள் ஆயிரம் ஆண்டு
படிந்தே மாண்டார் பார்ப்பனத் தொண்டு
கடைந்த பாற்கடல் கருத்தைக் கொண்டு
விடத்தை மென்றார் விழலாய் நின்று!
தீட்டுக் கொள்கை திவடப் பொய்கை
ஆட்டிப் படைக்க ஆரிய வருகை
வாட்டி வதைக்க மனுமுறை கீதை
கூட்டுக் கொள்ளை கோயில் கூகை!
சங்கத் தோகை எங்கும் தமிழே
வங்கக் கடலும் வாழ்ந்திட நெய்தல்
தங்கும் வளமை கற்றல் கலையே
அங்கம் முழுதும் அறிதல் நிலையே!
முத்தமிழ்ச் சோலை முக்கட லலையே
முத்துக் குளிக்க மூச்சு முகிலே
எத்தர் உறவில் இழந்தோம் எழிலே
புத்தர் போற்றும் வித்தகர் யாரே?
தந்தை பெரியார் வந்த தாலே
அந்தகன் பெற்றான் ஆயிரம் விழியே
சிந்தைக் கல்வி செய்தொழில் மானம்
விந்தைப் பதவி வெண்குடை வேந்தே!
விடுதலை இயக்கம் வந்த தாலே
விடுதலை வெளிச்சம் வேரினில் நீரே
மடைதிற வெள்ளம் மண்ணில் ஆறே
இடமிலை மூடம் இண்டமிழ் நாடே!
கயமைக் கடவுள் காட்டிட கோயில்
பயமே நாட்டில் படையல் மடமே
சுயமரி யாதை கொண்ட தாலே
பயமிலை மண்ணில் பைந்தமி ழோடே!
கோயில் கதவு திறந்திடப் பெரியார்
வைக்கம் போரில் வாகைத் தடியார்
ஜாதி மறுப்புத் திருமண முடையார்
வேத மெதிர்ப்பு வெந்தணல் கொடையார்!
கருப்புச் சட்டை காவல் படையார்
நெருப்புக் குட்டை நெய்தொட நிழலார்
நெருங்கா மூடம் நீதி நிலையே
கரும்பென எறும்பே எழுகதிர் நீயே!
வெற்றி முரசு வீர மணியே
பற்றுப் பாசம் பாசறைக் கனியே
கற்ற கல்வி கருத்துரை போதி
கொற்றம் காக்கும் கோளுயர் நீதி!
பெரியார் கொள்கை காப்பது கடனே
அரிய தாயினும் அடைபயன் மறமே
உரிமை மீட்போ உயிர்மெய் மானம்
பரிவாய் சமத்துவம் வளர்த்திட பயிரே!
வீர மணியே வெற்றி முரசே
தீரம் போற்றும் திகழொளி மரபே
பாரத நாட்டில் ஆரிய வேரோ
தூரெடு வாளே தூமணி வாழி!
திராவிடர் கழகத் தலைமணி வீர
திராவிடர் பண்பின் திகழொளி சூர
திராவிட மண்ணின் தெங்கிள நீர
திராவிட மரபின் தென்னவன் வாழி!
பிறந்த நாளுன் பெரியார் திடலில்
கறந்த பாலோ காதல் மடலோ
புறத்திணை போற்றும் பொய்தீ ரடலோ
மறத்திணை யாளா வாழி நீடு!
-பாவலர் சீனி பழனி
No comments:
Post a Comment