சிறீநகர், ஜன.7 மேனாள் காஷ்மீர் முதலமைச்சர்கள் 4 பேருக்கான சிறப்பு பாதுகாப்புப் படையைத் திரும்ப பெற அரசு முடிவு செய்துள்ளது.
காஷ்மீர் மாநில மேனாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், மெகபூபா முஃப்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்குத் தீவிர வாதிகளால் அச்சுறுத்தல் உள்ளதால் இந்த பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத்தைத் திருத்தி ஒரு அரசிதழ் வெளியானது. அந்த அறிவிப்பின் மூலம் மேனாள் முதலமைச்சர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்புப்படை பாதுகாப்பு வழங்கும் விதிமுறை நீக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது 4 மேனாள் முதலமைச்சர்களின் சிறப்பு பாதுகாப்பைத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் ஃபரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் தங்கள் சிறப்புப் படை பாதுகாப்பை இழக்க உள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த முடிவு எடுத்துள்ளது மிகவும் ஆபத்தானது என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment