சென்னை, ஜன.10 பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும் என்றும் அவமானப்படுத்த முடியாது என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவையை அடுத்த வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியாரின் சிலை உள்ளது. இந்த சிலையை நேற்று (9.1.2022) பொதுமக்கள் பார்த்தபோது சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும் தலை பகுதியில் குங்குமத்தை தூவிவிட்டும் அவமரியாதை செய்ததாக தெரிகிறது. இதைப் பார்த்ததும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். மேலும் அந்த சிலை அருகே பெரியாரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும், அவமானப்படுத்த முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது என்று அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment