மூத்த பொறியாளர் என்.எஸ். ஏகாம்பரத்திற்கு எமது வீர வணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 5, 2022

மூத்த பொறியாளர் என்.எஸ். ஏகாம்பரத்திற்கு எமது வீர வணக்கம்


ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை மூத்த பொறி யாளரும், தீவிர பெரியார் பற்றாளரும், தொடர்ந்த 'விடுதலை' வாசகரும், தந்தை பெரியார், அன்னை மணியம் மையார் மற்றும் நம்மிடமும் மாறா அன்பும், மரியாதையும் கொண்ட மானமிகு தோழர் என்.எஸ். ஏகாம்பரம் (வயது 92) அவர்கள் 3.2.2022 அன்று உடல் நலக் குறைவால் போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை அறிவிக்க வருந்துகிறோம்.

மறைந்த பொறியாளர் என்.எஸ். ஏகாம்பரம் அவர்கள் மறைந்த நாகரசம்பட்டி என்.எஸ். சம்பந்தம் அவர்களது தம்பிகளில் ஒருவர். சென்னை பெரியார் திடலின் முகப்பிலுள்ள ஏழு மாடிக் கட்டடமும், 'விடுதலை' பணிமனைகள் உள்ளிட்ட மற்ற பல கட்டடங்களும் உருவாவதற்கு முக்கிய காரணமானவர். உழைப்பை நல்கிய உத்தமர். நமது நிரந்தர நன்றிக்குரியவர். 

எவரிடத்திலும் பண்போடும், பொறுமையோடும் பேசிடும் பண்பாளர், பழகுதற்கு இனியவர்.

"விடுதலை"யின் தொடர் வாசகர், தொடர்ந்து நம்மோடும் - குடும்பத்தாரிடமும் பாசத்தோடு பழகி வந்தவர். அடிக்கடி தொலைபேசியில் நாங்கள் பேசி நலம் விசாரித்து மகிழ்வோம்.

நாகரசம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி நூலகங் களுக்கு, ரூபாய் பத்தாயிரம் தந்து தந்தை பெரியாரின் நூல்களை  வாங்கி அன்பளிப்பாகத் தந்தவர்.

அவரது மறைவால் வாடும் அவரது வாழ்விணையர் தங்கை டாக்டர் சரோஜினி மற்றும் அவரது மூன்று மகன்கள் மற்றும் குடும்பத்தாருக்கு நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டும் இழப்பு அல்ல;  நமது இயக்கக் குடும்பத்திற்கும் ஒரு பெரும் இழப்பு ஆகும். 

அவருக்கு நமது வீர வணக்கம்

கிவீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்
சென்னை
5-2-2022  

குறிப்பு: கனடாவில் உள்ள அவரது மூத்த மகன் இன்று (5.2.2022) காலை சென்னை வந்தார்; ஏற்கெனவே ஒருவர் இங்கேயே இருக்கிறார். 6.2.2022 அன்று    காலை 10 மணி அளவில் அவரது இறுதி நிகழ்வுகள் திருவள்ளூரில் நடைபெறும். நேற்றிரவு (4.2.2022) டாக்டர் திருமதி சரோஜினி அவர்களிடம் தொலை பேசியில் ஆறுதல் கூறினோம்.


No comments:

Post a Comment