ஒற்றை கால் குந்தம், கண்ணைக் கட்டிய சிலம்பம் போட்டியில் படப்பை மாணவர்கள் உலக சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

ஒற்றை கால் குந்தம், கண்ணைக் கட்டிய சிலம்பம் போட்டியில் படப்பை மாணவர்கள் உலக சாதனை

தாம்பரம், மார்ச் 7  ஒற்றை கால் குந்தம், கண்ணைக் கட்டிய சிலம்பம் போட்டிகளில், தாம்பரம் அருகே படப்பையைச் சேர்ந்த, இரண்டு ஓட்டுநர்களின் மகன்கள், உலக சாதனை படைத்துள்ளனர்.

    தாம்பரம் அருகே படப்பை, காட்டுக் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ். தனியார் நிறுவன வேன் ஓட்டுநர். அவரது மகன் தனுஷ்குமார் (14) இதே போல் படப்பை, கே. ஆர். புரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ஓட்டுநரான அவரது மகன் பிரசன்னா (11). இருவரும், தனியார் பள்ளியில், முறையே, 9 மற்றும் 6ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    இருவரும், படப்பையைச் சேர்ந்த இன்டெர்னல் பேர்ஸ் மார்ஷலார்ட்ஸ் அகாடமியில் சிலம்பம் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில், மாணவர் தனுஷ்குமார் 60 விநாடிகளில், 100 முறை ஒற்றை கால் குந்தம் செய்து, உலக சாதனை படைத்துள்ளார்.அதேபோல், மாணவர் பிரசன்னா, 60 விநாடிகளில், கண்ணைக் கட்டிக் கொண்டு 100 முறை சிலம்பம் செய்து, உலக சாதனை படைத்துள்ளார்.

    கடந்த 1ஆம் தேதி திருவண்ணாமலையில் நடந்த போட்டியில் இருவரும், இந்த விளையாட்டுகளில் உலக சாதனை படைத்து பெருமை சேர்த்துள்ளனர்.

    உலக சாதனை புரிந்த இருவருக்கும், திருவண்ணாமலை டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கி பாராட்டினார். சாதனை படைத்த இரண்டு மாணவர்களையும், ஊர் மக்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். இதில், தனுஷ்குமார் ஏற்கெனவே, சிலம்பம் போட்டியில், தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பங்கேற்று, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment