ஏழு பேரின் விடுதலை குறித்த ஆவணங்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார் தமிழ்நாடு அரசு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

ஏழு பேரின் விடுதலை குறித்த ஆவணங்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார் தமிழ்நாடு அரசு தகவல்

 சென்னை,ஏப்.8-  ஏழு பேரின் விடுதலை குறித்த ஆவணங்களைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக  நேற்று (7.4.2022) சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த மார்ச் 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 

அப்போது 7 பேரின் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா, அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட் டுள்ளதா  என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த கேள்விக்கு தமிழ்நாடு அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், பேரறிவாளன் மட்டுமின்றி 

7 பேரின் விடுதலை குறித்த ஆவணங்களும் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, எந்த தேதியில் ஆவணங்கள் அனுப்பப்பட்டது என தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்ட தலைமை நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


No comments:

Post a Comment