தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
சென்னை,ஏப்.20- ஆளுநர் அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவாதத்தின்போது, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (20.4.2022) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பதிலுரையில் குறிப்பிட்டதாவது,
ஆளுநர் அவர்கள் தருமபுரம் ஆதீனம் அவர்களைச் சந்திக்க திருக்கடையூர் கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றிருக்கக்கூடிய போராட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) அவர்கள் நேற்றையதினம் தெளிவாக ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். அதை முழுமையாக நீங்கள் பத்திரிகைகளிலே பார்த்திருக்கலாம்; தொலைக்காட்சிகளிலும் கேட்டிருக்கலாம். இருந்தாலும் காவல் துறையின் கூடுதல் இயக்குநர் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒன்றை நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
உண்மையும் இல்லை
‘இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் அவர்களுடைய கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல் துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர், அவர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். வாக்குவாதம் செய்து, பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை வீசி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை’ என்பதை காவல் துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் மிகத் தெளிவாக, மிக விளக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதேபோல, A.D.C. to the Hon’ble Governor of Tamil Nadu அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். Official -ஆக அவர் நம்முடைய Director General of Police (DGP) -க்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அதிலே அவர் கடைசியாகக் குறிப்பிட்டிருப்பது, “fortunately, Hon’ble Governor and the convoy passed unarmed”. . அதாவது, ஆளுநர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கற்களோ, கொடிகளோ மற்றும் எந்தப் பொருட்களாலும் பாதிக்கப்படாமல் காவல் துறையால் பாதுகாக்கப்பட்டன என்ற செய்தியை ஆளுநர் அவர்களுடைய பாதுகாப்பு அதிகாரி, காவல் துறை இயக்குநருக்குக் கடிதம் மூலம் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
பதிலை கேட்காமலேயே போய் விட்டார்...
ஆனால், இதுதான் நமக்கு chance; இதை அரசியலுக்காக நாம் பயன்படுத்திட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். இது அரசியல் கட்சிகளுக்கு சாதாரணமாக இருக்கக்கூடிய இயல்புதான். பொதுவாக, அ.தி.மு.க.-விலே இருக்கக்கூடிய அந்த ஒருங்கிணைப்பாளர்கள் இரண்டு பேரும் திட்டமிட்டு சேர்ந்துதான் அறிக்கை கொடுப்பார்கள். இங்கேயிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்துதான் அறிக்கை கொடுப்பார்கள். ஆனால், இந்த அறிக்கை மட்டும் தனித்தனியாக வந்தது. அப்பொழுதே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதிலே குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் அவர்கள் அவருடைய அறிக்கையிலே கடைசியாக, ‘தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு காவல் துறையைத் தனது கையில் வைத்திருக்கக்கூடிய இந்த விடியா அரசினுடைய முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்’ என்று சொல்லிவிட்டு, இப்போது பதிலைக் கேட்காமலேயே போய்விட்டார். அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.
அதேபோல, எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவர் அவர்கள் தனியாக ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். அவர் கடைசியாகச் சொல்வது; இன்னும் soft -ஆகச் சொல்லியிருக்கிறார். ‘மேற்படி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’என்று சொல்லியிருக்கிறார். இது நியாயமாக இருக்கிறது.
அங்கே போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது; சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
பயணம் பாதுகாப்பாக இருந்தது உறுதி
ஆளுநரின் பாதுகாப்பிற்காக மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவராக இருக்கக்கூடிய அய்.ஜி. தலைமையில் இரண்டு டி.அய்.ஜி.-க்கள், 6 எஸ்.பி.-க்கள், 6 கூடுதல் எஸ்.பி.-க்கள், 21 டி.எஸ்.பி.-க்கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,120 காவலர்கள் பயன்படுத்தப்பட்டு, அவருடைய பயணம் பாதுகாப்பாக இருந்தது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
"ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டன; கொடிகள் வீசப்பட்டன" என்பது ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர் என்பதுதான் உண்மை.
ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், ஆளுநர் அவர்களுடைய பாதுகாப்பில் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை முறையாக எடுத்திருக்கிறது. ஆளுநருக்கு உரிய பாதுகாப்பினை அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்பதை நான் உறுதியோடு இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்.
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

No comments:
Post a Comment