ராஞ்சி, மே 11- ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அரசு சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது சர்ச்சையான நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பி இருந்தது. தற்போது அந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க ஹேமந்த் சோரனுக்கு மேலும் 10நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்து வருகிறார் ஹேமந்த் சோரன். இவரது நிர்வாகத்தின்கீழ்தான் மாநில சுரங்கத் துறை உள்ளது. இவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி ராஞ்சியில் உள்ள 0.88 ஏக்கர் பரப்பு கல்கு வாரி சுரங்கத்தை தனது பெயரில் குத்தகைக்கு எடுத்துள்ள தாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாநில பாஜக தலைவரும் மேனாள் முதலமைச்சர் ரகுபர்தாஸ் குற்றஞ்சாட்டியதுடன், அது தொடர்பான ஆவணங்களையும் அவர் வெளியிட்டார்.
மேலும், மாநில முதலமைச்சரே சட்டத்தை மீறி செயல் பட்டுள்ளதால், அவரை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஆளுநரிடம் மனு கொடுத்திருந்தார். இதுகுறித்து, ஆளுநர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கருத்து கோரியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, தங்களை தகுதி நீக்கம் செய்வதற் கான நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ளக் கூடாது என்று கேள்வி எழுப்பி ஹேமந்த் சோரனுக்கு கடந்த மே 2ஆம் தேதி தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பி மே 10ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, தனக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் வேண்டும் என ஹேமந்த் சோரன் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து ஹேமந்த் சோரனுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
No comments:
Post a Comment