காரைக்கால்,செப்.6- புதுவை மாநிலம் காரைக்கால் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்குமார் தலைமையில் 15 மீனவர்கள் வழக்கம் போல், கடந்த 2-ஆம் தேதி காரைக்கால் கடற்கரை மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க விசைப்படகில் சென்றனர். கோடியக்கரை அருகே நடுகடலில் நேற்றுமுன்தினம் (4.9.2022) மீன்பிடித்துகொண்டிருந்தபோது, திடீரென அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், வலைப்போட்டு பிடித்த மீன்களில் பெரிய மீன்களை தரும்படி மிரட்டி இருக்கிறார்கள். அதற்கு மீனவர்கள் மறுத்து பேசியதால், தங்களது ரோந்துப்படகிலிருந்து, 3-க்கு மேற்பட்ட கடற்படையினர், மீனவர்களின் விசைப்படகிற்கு சென்று மீனவர்களை தாங்கள் வைத்திருந்த கம்பு மற்றும் கயிற்றால் அடித்து உதைத்து, ரூ.5 லட்சம் மதிப்பிலான மீன், அரிசி, மளிகை, ஜி.பி.எஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை அபகரித்தனர்.
மேலும் உடனே இந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அனைவரையும் கைது செய்துவிடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த மீனவர்கள், நேற்று மாலை காரைக்கால் திரும்பினர். பின்னர் அவர்கள், காரைக்கால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை களில் முதல் உதவி சிகிச்சை பெற்றனர். பலத்த காயம் அடைந்த ராஜ்குமார் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்லபட்டார்.
No comments:
Post a Comment