உத்தரப்பிரதேசத்தில் சமூகநீதிக் கொடி தலைதாழாது பறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த தலைவர்களில் முதன்மையானவரும் மேனாள் உத்தரப்பிரதேச முதலமைச்சரும், ஒன்றிய அரசின் இராணுவ அமைச்சராகவும் இருந்த முலாயம்சிங் யாதவ் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைகிறோம்.
மண்டல் கமிசன் பரிந்துரைகளை அமல்படுத்து வதற்கு என நாம் வடநாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது, சந்திரஜித் யாதவ், சவுத்திரி பிரம் பிரகாஷ் யாதவ், டி.பி.யாதவ் போன்றவர்களுடன் இணைந்து லக்னோ, அலகாபாத் பெருநகரில் பல மாநாடுகள் நடத்திட பெரிதும் அவர் முன்னணியில் நின்றவர்!
லோகியாவின் சோஷலிஸ்ட் கட்சிமூலம் அவர் சமூகநீதிப் போராளியாக ஆனவர். அவர் உத்தரப்பிரதேசத்தில் அகில இந்திய சமாஜ்வாடி கட்சியின் நிறுவனராகி, மிகப்பெரிய அளவிற்கு மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கும், நமக்கும் மற்றும் சமூகநீதிப் போராளிகளுக்கும் மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தார்.
அவரது மறைவு, ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பெரும் இழப்பு. அவரது அன்பு மகனும், மேனாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.10.2022

No comments:
Post a Comment