விழுப்புரம் அருகே 15 வயது மாணவி எரித்துக் கொலை: கொலைகாரர்களுக்குத் தேவை விரைவான கடும் தண்டனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 12, 2020

விழுப்புரம் அருகே 15 வயது மாணவி எரித்துக் கொலை: கொலைகாரர்களுக்குத் தேவை விரைவான கடும் தண்டனை!

அரசியல்படுத்துவதோடு அடிப்படை மனிதப் பண்புகளையும் கட்சிக்காரர்களுக்கு ஊட்ட வேண்டியது தலைவர்களின் கடமை!



விழுப்புரம் அருகே 10 ஆம் வகுப்பு மாணவி எரித்துப் படுகொலை செய்யப் பட்டுள்ளதைக் கண்டித்தும், மனிதன் மிருகமாகும் கீழ்நிலையைக் கண்டு வேதனையோடு - குற்றவாளிகள் ஆளும் கட்சியினர் என்பதால், விசாரணையில் எவ்வித குறுக்கீடும் இல்லாமல் கடும் தண்டனையை விரைவில் பெற்றுத் தருவது அவசர அவசியம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அறிக்கை வருமாறு:


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள சிறுமதுரைக் கிராமத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஜெயசிறீ (வயது 15) உள்ளூரைச் சேர்ந்த இருவரால் பட்டப்பகலில் எரித்துக் கொல்லப்பட்டார் என்பது மிகவும் கொடூர மான வெட்கித் தலைகுனியத்தக்க செய்தியாகும்.


மனிதர்களா - மிருகங்களா?


என்னதான் முன்பகை இருந்தாலும், அதற்காக இப்படியொரு கொடுமையை நிகழ்த்திட - மனிதர்களுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ? உருவில் மனிதர்களாகவும், உள்ளத்தில் மிருகங்களாகவும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு தேவைப்படாது. குற்ற வாளிகள் வீட்டிலும் மகள்களும், மகன்களும் இல்லையா? இதே கொடுமை தங்கள் வீட்டில் நடந்திருந்தால் எப்படி யெல்லாம் துடித்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கவேண்டாமா?


படுகொலை செய்யப்பட்ட சிறுமியும், கொலைகாரர்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண் ணும்போது, இதயம் மேலும் கனக்கிறது!


விரைந்து கைது செய்ததுபோல - விரைந்து தீர்ப்பையும்


பெற்றுத் தரவேண்டும்!


இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட இருவரையும் உடனடியாகக் கைது செய்திருப்பது வரவேற்கத்தக்கதே! அதே போல், இவர்கள் மீதான நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்படவேண்டும்.


விரைவு நீதிமன்றத்திடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டு தண்டனையும் விரைவாக வழங்கப்பட்டால், மனித மிரு கங்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும், அச் சத்தை ஊட்டக் கூடியதாகவும் இருக்கும்.


ஆளும் கட்சி என்ற


அதிகாரப் போதையா?


சம்பந்தப்பட்டவர்களை அ.இ.அ.தி. மு.க.விலிருந்து நீக்கி அ.தி.மு.க. ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்ததிலிருந்து கொலை காரர்கள் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகிவிட்டது.


ஆளும் கட்சியைச் சேர்ந்த நாம் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கருதியிருந்தால், அந்த அதிகாரப் போதை மிகவும் ஆபத்தானது.


பல நேரங்களில் இதுபோன்ற குற்ற வாளிகள் அரசியல் செல்வாக்கால் தண்டனையிலிருந்து தப்பித்த சம்பவங்கள் உண்டு.


இந்தக் கொலையில் அவ்வாறு நிகழாது என்று எதிர்பார்ப்போம் - அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.


உதவிகள் -


உயிரை மீட்டுத் தராது!


அருமை மகளை இழந்த பெற்றோருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் அறிவிக்கப் பட்டுள்ளது. இது தேவையானதுதான். வெறும் பணம், இழக்கப்பட்ட உயிரை மீட்க உதவப் போவதில்லை. அருமை மகளை இழந்து ஆறாத் துயரில் துடித்துக் கொண் டிருக்கும் பெற்றோரின், குடும்பத்தவர்களின், உற்றார் உறவினர்களின், மனிதநேயம் உள்ளவர்களின் உள்ளத்தில் மூண்ட தீயின் வலியை - புண்ணை எந்த வகையிலும் குணப்படுத்திட அது உதவாது.


குற்றவாளிகள் மீதான வழக்கைத் துரிதமாக நடத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தருவது வேண்டுமானால் ஒரு வகையில் ஆறுதலாக இருக்கக் கூடும்.


அடிப்படை மனிதப் பண்புகளோடு தயார் செய்வீர்!


தம் கட்சிக்காரர்களை அரசியல்படுத்துவ தோடு, தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்காமல், அடிப்படை மனிதப் பண்புகளையும் அவ்வப்போது தலை வர்கள் தம் கட்சியினருக்கு ஊட்ட வேண்டியது மிகவும் அவசியமாகும்.


 


கி.வீரமணி,


தலைவர்,


திராவிடர் கழகம்


12.5.2020


சென்னை


No comments:

Post a Comment