திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்!
பிறப்புரிமை: 'சுயராஜ்ஜியமா? சுயமரியாதையா?' - பெரியார் விளக்கம்!
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.
அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன.
அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது!
நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'
வகுப்புவாரி உரிமைக்காக....
இந்தக் கட்டத்தில்தான் நீதிக்கட்சியின் பனகல் அரசரால் இந்து மத அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து மடாதிபதிகள் கூச்சலிட்டார்கள். காங்கிரசிலிருந்த பிராமணத் தலைவர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள், “மதத்திற்கு ஆபத்து” என்றார்கள், மத விவ காரங்களில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்றார்கள். பெரியாரோ இது அறநிலையங்களின் சொத்துகளைப் பாது காக்கிற சட்டம் என்பதால் காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என்றார். காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வந்த விஷயம் வகுப்பு வாரி பிரதிநிதித்துவ உரிமை. “தேசியம்“ பேசிய காங்கிரஸ் தலைவர்கள் பிராமணரல்லாதார் நலனைப் பிரதிபலிக்கும் இந்த உரிமையை மட்டும் ஏற்கவில்லை. அவர்களது தேசியம் ஏற்கெனவே உள்ள பிராமணிய ஆதிக்கத்தைக் காத்து நிற்கிற கோட்பாடாகும். மற்றவர்களோ “தேசியம்“ என்றால் அனைத்துத் தரப்பாரின் நலனையும் ஏற்கும் கோட்பாடு என்று கருதினார்கள். தவிர்க்க முடியாதபடி மோதல் வந்தது.
1920இல் நடந்த திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டிலிருந்து ஒவ்வொரு மாநாட்டிற்கும் வகுப்புவாரி தீர்மானத்தைப் பெரியார் கொண்டு போவார். ஒவ்வொரு மாநாட்டிலும் ஏதேனும் காரணத்தைச் சொல்லி காங்கிரசின் பிராமணிய வாதிகள் தட்டிக் கழித்து விடுவார்கள். அவர்களை அன்றே இந்த இட ஒதுக்கீடு கோரிக்கை மிரட்டத் துவங்கியது. இதில் உச்சக்கட்டம் 1925 நவம்பரில் நடைபெற்ற காஞ்சிபுரம் தமிழ் மாகாண மாநாட்டில் நடந்தது. இங்கு இந்தத் தீர்மானத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. “அப்பொழுதுதான் காங்கிரசால் பார்ப்பனரல்லாதார் நன்மை பெற முடியாது, 'காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை’ என்று மாநாட்டிலேயே எழுந்து கூறிவிட்டு வெளியேறினார். உடனே ஒரு பெருங் கூட்டம் அவருடன் மாநாட்டை விட்டு வெளியேறிவிட்டது” என்கிறார் சாமி சிதம்பரனார்.
இதற்கிடையில் அந்த ஆண்டு மே மாதத்திலேயே “குடி அரசு” எனும் வாரப் பத்திரிகையை ஈரோட்டில் தொடங்கி யிருந்தார் பெரியார். அதனுடைய முதல் வெளியீட்டில் “ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து வெறும் ‘தேசம்' என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கம் அன்று” என்று பிரகடனப்படுத்தப் பட்டிருந்தது. விரைவிலேயே "சுயமரியாதை இயக்கம்" என்று பெயர் பெற்ற பெரியாரின் இயக்கம் இப்படியாக ஆரம்பமானது எனலாம். காங்கிரசிலிருந்து விலகியது இப்போது இன்னும் வசதியாகிப் போனது. பிராமணிய எதிர்ப்பு இயக்கத்தைத் தனது போக்கில் கட்டி வளர்க்க ஆரம்பித்தார்.
காங்கிரசிலிருந்து பெரியார் விலகினார் என்பதைவிட அங்கிருந்த பிராமணியவாதிகளால் விலக்கப்பட்டார் என்பதே உண்மையாகும். நாம் இதுவரை பார்த்து வந்த சமூக சீர்திருத்தவாதிகள் யாரும் காங்கிரசில் தீவிரமாக இருந்து பின்னர் விலகி தனி இயக்கம் கண்டவர்கள் அல்ல. ஜோதிபா பூலே, அயோத்திதாசர், அம்பேத்கர் ஆகியோர் ஆரம்பத்திலிருந்த காங்கிரசை நம்பியவர்கள் அல்ல. ரானடே, கோகலே, காந்திஜியோ கடைசிவரை காங்கிரசைக் கைவிடாதவர்கள். இவர்தான் அதை நம்பியிருந்து, அதில் தீவிரமாக ஈடுபட்டு, அதன் மாகானத், தலைவர் - செயலாளர் பதவி வரை வந்து, பின்னர் அனுபவத்தால் அதன் பிராமணி யப் போக்கை, உணர்ந்து, வெறுத்துப் போய் வெளியேறியவர், தனக்கெனத் தனித்ததொரு இயக்கம் கண்டவர்.
சுயமரியாதைக் கொள்கைப் பிரகடனம்
1926 ஜனவரியில் - அதாவது காங்கிரசிலிருந்து விலகிய ஒரு சில மாதங்களில் - “குடிஅரசு” ஏட்டில் பெரியார் எழுதிய “பிறப்புரிமை - சுயராஜ்யமா? சுயமரியாதையா?” எனும் சிறு கட்டுரை சுயமரியாதை, இயக்கத்தின் கொள்கைப் பிரகடனமாக இருந்தது. அதில் இந்தப் பகுதி வருகிறது - “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற அநேகர், சுயராஜ்யம் இன்னது என்பதைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொன்னவர்கள் அல்ல. அதை ஜனங்கள் அறியாதிருக்கும்படி எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வருகின்றார்கள், மகாத்மா காந்தி அவர் கள் சுமார் அய்ந்து வருஷங்களுக்கு முன்பாக, சென்னைக்கு வந்திருந்த சமயம். ஓர் கூட்டத்தில் பேசும்போது ‘என்னு டைய சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள யோக்கி யதை இல்லாமல் இருக்குமானால் நான் சுயராஜ்யத்தை விரும்புவதில் அர்த்தமே இல்லை’ என்று சொல்லியிருக் கிறார். மனிதனுக்கு அவனுடைய சுயமரியாதை என்னும் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதுதான் பிறப்புரி மையே அல்லாமல் அரசியலான ராஜியம் என்னும் ‘சுயராஜ் யம் ஒருக்காலும் பிறப்புரிமை ஆகமாட்டாது. ராஜிய பாரமானது ஒரு தொண்டு.”
இதுவொரு அசலான சிந்தனை. இது திலகர் தந்த கோஷத்தை கேள்விக்குள்ளாக்கியது. அந்த கோஷத்தைத் தான் காங்கிரசின் பிராமணியவாதிகள் குரல்வளையில் தேக்கி வைத்திருந்தார்கள். அவர்களுக்குப் பிரச்சனை ஆட்சியதிகாரம் இல்லாமலிருந்தது. ஆகவே அதை நாடினார்கள். மற்றவர்களுக்கோ அவர்களின் சுயமரியா தையே - தன்மானமே - மறுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அதை நாட வேண்டியது. அப்படி அவர்கள் நாடிவிடா மலிருக்க, சுயராஜியத்தைக் சகலருக்குமான பிறப்புரிமையாக முன் வைத்தார்கள். அதனால்தான் அதை விவரிக்காமல், மொட்டையாக அந்தச் சொல்லாடலைப் பயன்படுத்தி வந்தார்கள்.
இதிலே அடுத்த சுவையான விஷயம். சுயமரியாதை எனும், சொல்லாடலைப் பெரியார் காந்திஜியிடமிருந்து பெற்றார் என்பது. ஆனால், பெற்றதும் அதற்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுத்தார். சுயராஜியம் எனும் பதத்தோடு அதை ஒப்பிட்டதில் அது கிடைத்தது. தொடர்ந்து அவர் எழுதியதை நோக்குங்கள் - “மனித உடல் தாங்கிய ஒருவன் அவனுடைய தெய்வத்தைக் காண, தரிசிக்க உரிமையற்ற ஒருவன் எப்படி சுயமரியாதை உள்ளவனாவான். அந்த சமூகத்திற்கு சுயராஜ்யம் எதற்கு? எந்த ராஜ்யம் இருந்தால் தான் அவர்களுக்கு கவலை என்ன? இம்மாதிரி ஒரு சமூகத்தாரை சுயமரியாதை அற்று ஒடுக்கி வைத்திருக்கும் ஒரு ராட்சஸ சமூகத்தார் சுயராஜ்யம் அடைவது மற்ற சமூகங்களுக்கு நன்மை தருமா? அல்லது ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்கும் சேர்ந்துதான் சுயராஜ்யம் தேடுவது என்று சொல்லுவோமானால் அவர்கள் தங்கள் தெய்வங்களைக் காணவும் தரிசிக்கவும் முடியாதபடியும், தெருவில் நடக்கவும் கண்ணில் தென்படவும் முடியாதபடியும் வைத்து இருப்ப தற்குக் காரணம் சுயராஜ்யம் இல்லாமை தானா?”
- - -
எல்லாருக்குமாகத்தான் சுயராஜியம் கேட்கிறோம் என்றார்கள். ஆனால், தாங்கள் பறித்து வைத்திருக்கிற உரிமைகளைத் தங்களது சகசுதேசிகளுக்குத் தர அவர்கள் தயாராக இல்லை. தீண்டாமைக் கொடுமை இருக்கிறதே, அதற்கு எது காரணம்? சுயராஜியம் இல்லாமைதானா? நறுக்கென்று கேட்டார். தீண்டாமை பிராமணியவாதிகளின் சுதேசித் தயாரிப்பு அல்லவா? இதை ஒழிக்காமல் சுயராஜியம் கேட்பது யாருக்காக? சுயமரியாதை பறிக்கப்பட்டவருக்கு சுயராஜியத்தால் என்ன பயன்? உண்மையில் இவர்கள் சுயராஜியம் கேட்பது சூத்திரர்கள் - பஞ்சமர்களை மேலும் ஒடுக்கத்தானோ எனும் சந்தேகம் பெரியாருக்கு வந்து விட்டது. இதிலே சுயமரியாதைப் பிரச்சனையை சூத்திரர்கள் நோக்கிலிருந்து வைக்காமல் பஞ்சமர்கள் நோக்கிலிருந்து வைத்ததும் கவனிக்கத்தக்கது.
“அந்நிய ராஜ்யம் நமது ஜனங்களை இம்மாதிரி கொடுமையாக நடத்தும்படி நமக்குச் சொல்லவே இல்லை. எந்தக் காரணத்தைக் கொண்டோ அந்நிய ராஜீயபாரங்கள் நமது நாட்டிற்கு ஏற்படாமல் இருக்குமேயானால் இந்த சுய மரியாதை இன்னதென்று உணர்வதற்குக்கூட நமக்குச் சௌகரியம் கிடைத்திருக்காது. நமது நாட்டு மக்களின் சுயமரியாதைக்கு விரோதமாயிருப்பது நம் நாட்டார் சிலரின் ஆதிக்கத்தினாலே அல்லாமல் அந்நிய அரசாங்கத்தின் ஆதிக்கத்தினால் அல்ல. ஆனால் நமது நாட்டில் பெரும் பாலோர் சுயமரியாதை அற்றிருக்கும் தன்மை அந்நிய அரசாங்கத்தாருக்கு அநுகூலமாயிருப்பதினால் இக் கொடுமைகளைப் போக்க அவர்களுக்கு அதிகக் கவலையில்லை” - மிகக் கவனமாக, கச்சிதமாக எழுதியிருக்கிறார் பெரியார்.
தீண்டாமைக் கொடுமைக்கு பிரிட்டீஷார்தான் காரணம் என்று எவரும் சொல்லமாட்டார். அவர்கள் மூலம் முதலாளித்துவ ஜனநாயகம் இங்கே வந்திராவிட்டால் இந்த சுயமரியாதை உணர்ச்சியும் வந்திருக்காது. அதே நேரத்தில் அது இன்னும் முழுமையாக வராமலிருப்பது அந்நிய ஆட்சியாளர்களுக்கு வசதியாக இருப்பதால் இது பற்றி பெரிதும் கவலைப்படவில்லை அவர்கள். ஆகவே, அது பற்றிக் கவலைப்பட்டு ஒரு சமூக சீர்திருத்த இயக்கத்தை நடத்த வேண்டிய வேலை சுதேசித் தலைவர்களுக்கு இருந்தது. இதைச் செய்யக் காங்கிரஸ் தலைவர்கள் தயாராக இல்லாத நிலையில்தான் பெரியார் களத்தில் இறங்கினார். சுயமரியாதை இயக்கம் பிறந்தது.
அமைப்புகளை அடையாளம் கண்டார்
இதிலே ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த இயக்கம் பிறந்த உடனேயே தனது எதிரி அமைப்புகளைத் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டிருந்தது. 1926 பிப்ரவரியில் எழுதிய ஒரு கட்டுரையில் “நாடக அதிகாரி பிராமணர் - வசூலிக்கும் அதிகாரிகள் பெரும்பாலும் பிராம ணர்கள் - இந்தப் பணத்தை அனுபவிப்பதும் ராமகிருஷ்ணா மடம் என்று சொல்லப்படும் பிராமண ஆதிக்கமுள்ள. பிராமண மடம்“ என்றார் பெரியார். பிராமணியம் காக்கப் புறப்பட்டதே ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷன் என்பதைக் கண்டு வந்தோம். அதைச் சட்டென்று புரிந்து கொண்டு தமிழர்களுக்கு அடையாளம் காட்டினார் பெரியார். “ராமகிருஷ்ணா ஹோம் நிதி” என்று பிராமணிய வாதிகள் வசூலித்தது யாருக்காக என்பதை எடுத்துக் காட்டினார்.
இதே ஆண்டு மார்ச்சில் எழுதிய ஒரு கட்டுரையில் “இந்து மகாசபை என்கிற பிராமண வர்ணாசிரம தர்மச் சபைக்கு நமது நாட்டில் யோக்கியதை சம்பாதிக்க ஸ்ரீமான் லாலா லஜபதிராயைக் கூட்டி வந்து ஏமாற்றினார்கள்” என்றார் பெரியார். இதே “குடிஅரசு” இதழில் “இந்து மகாசபையின் உண்மை நிறம்“ எனும் சிறு கட்டுரையும் எழுதினார். அதில் இப்படிக் குறிப்பிட்டார் - “நமது நாட்டில் இந்து மகாசபை என்னும் பேரால் ஒரு பிராமண வர்ணாஸ்ரம சபை ஏற்பட்டிருப்பதைப் பற்றி நாம் பலமுறை அது இந்தியாவை அந்நியருக்கு காட்டிக் கொடுப்பதற்கு ஆதர வாயிருந்த - இருக்கிற பிராமண வர்ணாஸ்ரமத்தை நிலை நிறுத்தவும், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட முடியாதபடி மத்தியில் ஒரு தடைக்கல்லாய் இருக்கவும் (ஏனென்றால் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாய் விட்டால் சர்க்காரைவிட வர்ணாஸ்ரமிகளுக்கு பெரிய ஆபத்து) ஏற்பட்டது என்றும், பிராமண சூழ்ச்சிகள் பல வற்றில் இது ஒன்று எனவும் பேசியும், எழுதியும் வந்திருக் கிறோம்.”
இந்து மகாசபையின் பிரதான நோக்கம் இந்து - முஸ்லிம் மாச்சரியத்தையும் - மோதலையும் தோற்றுவிப்பது, அதன் மூலம் பிராமணியத்தைக் காப்பது என்பதை அப்போதே பெரியார் புரிந்து வைத்திருந்தார். அதைப் பற்றித் தமிழர் களுக்குச் சொன்ன முதல் தலைவர் அனேகமாக இவராகத் தான் இருப்பார். அடைப்புக்குறிக்குள் உள்ள வார்த்தைகள் மிகவும் அர்த்தபாவம் மிக்கவை.
இந்து மகாசபையானது பிராமண வருணாசிரம சபையே எனும் தனது கணிப்பிற்குச் சில ஆதாரங்களையும் தந்தார் பெரியார். அதிலொன்று அன்றைய தமிழக பிராமணியவாதி களையும் புரிய வைக்கிறது. அது - “தமிழ் நாட்டில் உள்ள இந்து மகாசபைக்கு வடிகட்டின வர்ணாஸ்ரமியான ஸ்ரீமான் டிஆர். ராமச்சந்திரய்யர் அக்கிராசனராய் இருப்பதும், ஒரு வேளை சாப்பாடு ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை பார்த்துவிட்டால் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன் என்று சொன்ன ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் முதலியோர் முக்கியஸ்தர்களாகவும் இருப்ப தோடு அல்லாமல், தமிழ் நாட்டிலுள்ள கிளை இந்து மகாசபைகள் இரண்டொன்றில் தீண்டாமையை ஒழிப்பது தப்பு என்றும், இது விஷயத்தில் பிராமணர்கள் முயற்சியாய் இருந்து அதை எதிர்க்க வேண்டும் என்றும் தீர்மானித்திருப் பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.” கொடுமையைக் கவனியுங்கள், ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை பார்த்துவிட்டால் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன் எனச் சொன்ன பேர்வழிதான் இந்து மகாசபைக்கு இங்கே முக்கியஸ்தர்!
(தொடரும்)
No comments:
Post a Comment