தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 3 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 18, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 3

"ஜாதி முடிச்சுப் போட்டவன் 'பிராமணன்' அவன்தான் அதை அவிழ்க்க வேண்டும்!" - பெரியார்



தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.


அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன.


அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!


சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது!


நன்றி...


- ஆசிரியர், 'விடுதலை'


 


இப்படி உள்ளூர் உதாரணம் கொடுத்த பெரியார், அகில இந்திய உதாரணம் ஒன்றும் கொடுத்தார். அது - “இந்து மகா சபையின் ஒரு கூட்டத்தில் விதவைகள் புனர்விவாகம் செய்து கொள்ளலாம் என்பதாக ஒரு தீர்மானம் ஏகமனதாய் ஒரு பெரிய விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற் றினார். இது விஷயத்தைப் பண்டித மாளவியா கேள்விப் பட்டதும் இவ்விஷயம் மகாநாட்டுக்கு கொண்டுவரப் பட்டால் மகாநாட்டுப் பந்தலைக்கூட நான் எட்டிப்பார்க்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்.’’ பிராமணியத்தின் மற்றொரு பிரதான கூறாகிய பெண்ணடிமைத் தனத்திலும் பிடிவாதமாக இருந்தது இந்துமகா சபை. அன்றே மாதர் குலத்திற்காகக் குரல் கொடுக்கிற மெய்யான ஆண்மகனாகக் கிளம்பிவிட்ட பெரியார் இது விஷயத்திலும் அந்தச் சபையை அம்பலப்படுத்தினார்.


லாலா லஜபதிராய், பண்டித மதன்மோகன் மாளவியா பற்றி கண்டு வந்திருக்கிறோம். இவர்கள் எத்தகைய மடிசஞ்சிப் பேர்வழிகள் என்பதை அறிவோம். காங்கிரசிலும் இந்து மகா சபையிலும் ஒருங்கே இருந்து கொண்டு அரசியலையும் சமுதாயத்தையும் ஒருங்கே பிராமணமயமாக்கத் துடித்த வர்கள் இந்த மகானுபாவர்கள். இவர்கள் அவ்வப்போது தீண்டாமை ஒழிப்புப் பற்றிப் பேசுவார்கள், அதுவும் ஊரை ஏமாற்ற. “ஸ்ரீமான் பண்டித மாளவியா அவர்கள் இந்து மகாசபையில் பேசும்போது தீண்டாமை ஒழிய வேண்டும் என்று பேசுவதும், வர்ணாஸ்ரம பரிபாலன சபையில் இருக்கும்போது தீண்டாமையை ஒழிக்கக் கூடாது என்கிற தீர்மானங்களை நிறைவேற்றுவதுமாய் இருக்கிற தந்திரங் களை எடுத்துக் காட்டியிருக்கிறோம்” என்று பெரியார் எழு தும்போது உண்மை புலப்படுகிறது. இந்த மனிதர் மாளவியா “வர்ணாஸ்ரம பரிபாலன சபை” என்பதிலும் இருந்திருக் கிறார்! இத்தகையவர்களை அடையாளம் காட்டிய அதி முக்கிய பணியையும் நிறைவேற்றினார் பெரியார்.


இதே ஆண்டு மே மாதம் மீண்டும் “இந்து மகாசபை” பற்றி எழுதினார். அதில் இப்படிக் குறிப்பிட்டார் - “இந் துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகிவிட் பால் நமது சர்க்காருக்கு எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிக சங்கடம் நமது பிராமணர்களுக்கு ஏற்பட்டுவிடும். ஏனெனில் சிறு வகுப்பாயுள்ளவர்கள் வாழ வேண்டுமானால் பெரு வகுப்பாய் உள்ளவர்களை ஒருவருக்கொருவர் உதைத்துக் கொள்ளும்படி செய்து பிரித்து வைத்தால்தான் முடியும் என்பது ஒரு பழமொழி.’’ பிராமணியத்தின் இந்த உத்தியைக் காலந்தோறும் கண்டு வருகிறோம். அதை அன்றே தமிழர்களுக்குச் சொன்னவர் பெரியார். ‘


இன்னொன்றையும் சொன்னார். அது - “தற்காலம் தேசம் எங்கும் ஏற்பட்டிருக்கும் இந்து முஸ்லிம் கலவரத்திற்கு இந்து மகாசபையே காரணம் என்பது நாம் சொல்லாலே விளங்கும். தற்கால பிராமணியம் உள்ளவரை தேசம் உருப்படப் போவதில்லை என்பது நிதர்சனமாகி வருகிறது.” இந்துமுஸ்லிம் கலவரமானது பிராமணியத்தின் திட்டமிட்ட சதி என்பதையும், அதற்கான வேலையை இந்து மகாசபை செய்தது என்பதையும் பளிச்செனச் சொன்னவர் பெரியார்.


இந்து மகாசபையின் மதன்மோகன் மாளவியா லண் டனுக்குப் போக முடிவு செய்தார். ஆனால் கடல் தாண்டக் கூடாது எனும் சாஸ்திரத்தை மீறவும் அவருக்கு மனமில்லை. என்ன செய்தார் தெரியுமா? இந்திய மண்ணில் ஒரு உருண்டை யையும் கங்கா ஜலத்தில் சிறிதையும் கையோடு எடுத்துக் கொண்டு போனார். பிராமண சமையல்காரர் ஒருவரையும் கூடவே அழைத்துப் போனார். இந்த மடிசஞ்சித்தனத்தைக் கேலி செய்யும் வகையில் “மண்ணுருண்டை மாளவியா” என்றே அவரைக் குறிப்பிட்டு எழுதினார் பெரியார்.


ஆரிய சமாஜத்தையும் பெயர் சொல்லி விமர்சித்தார். அதன் “சுத்தி” எனப்பட்ட மதமாற்ற வேலையின்படி பிராமணிய மந்திரங்களையும் சடங்குகளையும் ஒருவர் ஏற்க வேண்டியிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.


மூன்று காரியங்களைச் செய்தார்


சுயமரியாதை இயக்கத்தின் துவக்கத்திலேயே மூன்று காரியங்களைச் செய்தார் பெரியார். ஒன்று, வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக விதவிதமாக வாள் சுழற்றியது. இரண்டு, தீண்டாமை ஒழிப்புக்கும் தனி முக்கியத்துவம் கொடுத்தது. மூன்று, பிராமணியத்தின் ஓர் அடிவேராக இருந்த மதம் - கடவுள் - சாஸ்திரங்களை விமர்சித்தது. 1926 முதல் ஆறு மாதங்களிலேயே இந்த மூன்றும் அவரது “குடி அரசு” எழுத்துக்கள் - பேச்சுக்களில் வெளிப்பட்டன.


அரசாங்கப் பதவிகளில் பிராமணர் - பிராமணரல்லாதார் நிலையை ஒப்பிட்டு எழுதினார். கலெக்டர் உத்தியோகத்தில் 11 இந்தியர்கள் இருப்பதில் 9 பேர் பிராமணர்கள். ரூ 250க்கு மேல்பட்ட உத்தியோகங்களில் பிராமணர்கள் 594 பேர் என்றால், பிராமணரல்லாதார் 280 பேர் மட்டுமே. ரூ 150க்கும் ரூ 250க்கும் இடைப்பட்ட உத்தியோகங்களில் பிராமணர்கள் 2,679 பேர் என்றால் பிராமணரல்லாதார் 1,666 பேர் மட்டுமே. 200 ஜில்லா முன்சீபுகளில் 150 பேர் பிராமணர்கள். 61 சப் ஜட்ஜுகளில் 45 பேர் பிராமணர்கள். ஜில்லா ஜட்ஜுகளில் 7 பேர் பிராமணர்கள். சென்னை மாகாணத்தில் பிராமணர் களின் எண்ணிக்கை 3 சதவீதத்திற்கும் குறைவே. ஆனால், பதவிகளில் மட்டும் அதைவிட பலப்பல மடங்கு அதிகம். அதனால் தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதாக இப்படிப் புள்ளிவிபர ஆதாரத்துடன் வாதாடினார் பெரியார்.


வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி பேசியிருந்தார். அவரது பேச்சின் சாரங்களை முதலில் பட்டியலிட்டவர், பின்னர் அதற்குப் பதிலும் கொடுத்தார். சத்தியமூர்த்தி செய்த விமர்சனத்தில் இப்படியொரு அம்சம் - “கோகலே ஒப்புக் கொள்ளாதிருந் தால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டிருக்காது.” இதற்குப் பெரியாரின் பதில் தர்க்கரீதியானதும் சுவாரஸ்ய மான தும் ஆகும். அது - “வகுப்புவாரி பிரதிநிதித் துவத்தின் நன்மை தீமைகளைப் பகுத்து உணர கோகலேயை விட இந்தியாவிலே வேறு ஒருவர் இருந்தார் என்று யாராலும் சொல்ல முடியாது. மகாத்மாவுக்கும் ஸ்ரீமான் ஈ.வெ. இராம சாமி நாயக்கருக்கும் இந்தியாவிலேயே யோக்கியமான பிராமணன் இல்லை என்கிற வாதம் நிகழ்ந்தபோது அது சமயம் மகாத்மா ஒருவர்கூட இல்லை என்று சொல்லக் கூடாது, நான் ஒரு யோக்கியமான பிராமணனைப் பார்த் திருக்கிறேன், அவர் தான் கோகலே’ என்று சொன்னதோடு அதற்குப் பல உதாரணங்களையும் சொல்லி ‘மனிதர்களில் அவருக்கு மேம்பட்ட மனிதரை நான் பார்த்ததில்லை’ என்று சொன்னார். இது சில தென்னாட்டு பிராமணர்களையும் வைத்துக் கொண்டுதான் சொன்னார். இப்பேர்ப்பட்ட ஓர் உத்தம பிராமணராலும், உத்தம தேசபக்த ராலும், கொஞ்சமும் சுயநலமற்ற தியாகியாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்.”


“ஒரு யோக்கியமான பிராமணர்” என்று திலகரைச் சொல்லவில்லை காந்திஜி, கோகலேயைத்தான் சொன்னார். ஏன் சொன்னார் என்பது புரிந்து போகிறது. அவர் விரிந்த மனசுக்காரர். முஸ்லிம்கள் உள்ளிட்ட பிறரது உரிமையையும் நலனையும் அங்கீகரித்த பிராமணர். அவரே ஒப்புக் கொண்ட ஒன்று இந்த சத்தியமூர்த்தி எதிர்க்கிற காரணத்தால் தவறாகிப் போகாது என்றார் பெரியார். பிராமணியவாதிகள் திலகரை தூக்கிப் பிடித்து, கோகலேயை உதாசீனப்படுத் தினார்கள் என்பதை ஏற்கெனவே கண்டு வந்தோம். அதன் காரணத்தை சத்தியமூர்த்தியின் ஒப்புதல் வாக்குமூலம் வெளிப்படுத்தியது. பெரியார் அதை வசமாகப் பிடித்துக் கொண்டார்.


மலையாளம் ஜில்லாவைச் சேர்ந்த பாலக்காடு நகராட்சி எல்லைக்குள் உள்ள கல்பாத்தி என்கிற பகுதி பிராமணர்கள் முக்கியமாய் வகிக்கும் பாகம். அதிலுள்ள தெருக்கள் எல்லாம் நகராட்சியாரைச் சேர்ந்தது. அப்படியும் அத் தெருக்கள் வழியாகப் பஞ்சமர்களை நடமாட விடுவதில்லை பிராமணர் கள். அங்கு மட்டுமல்ல பாலக்காடு நகர பெரிய கடை வீதியி லும் அங்குள்ள வியாபாரிகள் இவர்களை அனுமதிப்பதில்லை. ஏதேனும் பொருள் வாங்க வேண்டும் என்றால் முகமதியர் அல்லது கிறிஸ்தவர் அல்லது சாதி இந்து மூலமாகத்தான் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த அநியாயத்தைக் கண்டித்து வன்மையாக வும், உணர்வு பூர்வமாகவும் எழுதினார் பெரியார். “திருட்டு, கொலை, கொள்ளை, போர்ஜரி, விபசாரம் முதலிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியாகவோ, தண்டித்த கைதியாகவோ இருந்தால் அந்த வீதி வழியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீஸ்கார்கள் கைவிலங்கிட்டோ சங்கி லியில் பிணைத்துக் கட்டியோ கூட்டிக்கொண்டு போவதை அடிக்கடி பார்க்கலாம். யோக்கியமானவன்தான் அவ்வழி யில் நடக்கக் கூடாது” என்று அவருக்கே உரிய நயமான நையாண்டியோடு எழுதினார்.


தமிழ்நாட்டிலோ பிராமணரல்லாத சகலகர்கள்பாலும் ஒருவகைத் தீண்டாமை - பாராமை -இருந்தது - “தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடு தியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது. அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்று பாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கு என்று ஒதுக்கி வைத்துவிட்டு, நாலில் ஒரு பாகத்தை ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’, ‘மகமதியர்’, ‘கிறிஸ்தவர்’, ‘ஆங்கிலோ இந்தியர்’ என்கின்ற பிராமணரல் லாதவருக்கு என்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும், வாய் கொப்பளிப்ப தற்கும், விளக்குமாறு சாணிச்சட்டி, கூடை, முறம் வைப்ப தற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்கு மாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடமே உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது. இவை களைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர்களை வகுப்பு துவேஷத்தைக் கிளப்புகிறார்கள், இது மிகவும் அற்பத்தன மானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.’’ மனிதர்களுக்குள் இவ்வளவு கேவலமான ஏற்றத்தாழ்வு காட்டுவது அற்பத்தனமான விஷயமாம்! ஒடுக்குமுறையாளர்களுக்கு ஒடுக்குமுறை எப்போதும் அற்பத்தனமாகத்தான் படும். ஒடுக்கப்பட்டவனுக்கல்லவா அந்த வலியும், ரணமும் தெரியும். அதை தனக்கே உரிய ஒரு எளிய இலக்கிய நடையில் எதிரொலித்தார் பெரியார்.


“தாழ்ந்த வகுப்பாருக்கும் தொழிலாளர்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவம் ஏற்படுத்த வேண்டும் என்பதை நமது பார்ப்பனர்கள் எவ்வளவேர் தங்கள் சூழ்ச்சியின் மூலம் எதிர்த்தும், சர்க்கார் அவ்வகுப்புகளுக்கென்று பிரதிநிதித் துவம் கொடுக்க பார்லிமெண்டில் சம்மதித்து விட்டார்கள்” என்று உற்சாகமாக வரவேற்றார் பெரியார். இதே கட்டுரை யில் இன்னொரு அபூர்வமான விஷயமும் உள்ளது. “எந்தக் காரணத்தைப் பற்றியும் சர்க்கார் நியமனத்திற்கோ, பொதுத் தேர்தலில் தங்களுக்கென்று ஸ்தானங்கள் ஒதுக்கி வைப் பதற்கோ கண்டிப்பாய் ஒப்புக் கொள்ளக் கூடாது. தங்கள் வகுப்பு தனித்தேர்தல் மூலமே தங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி பிரயத்தனப்பட வேண்டும்“ என்று தனித்தொகுதி முறையை அன்றைக்கே பரிந்துரைத்தார். இது விஷயத்தில் எல்லாம் அவர் தாழ்த்தப்பட்ட மக்களோடு சேர்ந்து நின்றார்.


“உயர்வு தாழ்வு வித்தியாசங்கள் பிராமணரிடத்தில் மாத்திரம் இல்லை. பிராமணரல்லாதாரிடத்திலும் இந்த வித்தியாசம் இருந்துதானிருக்கிறது. நாம் பிராமணர்களை மட்டும் ஏன் சொல்லுகிறோம் என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் தான் வழிகாட்ட வேண்டும். முடிச்சுப் போட்டவன் அவிழ்த்தால் சீக்கிரம் அவிழ்க்கலாம். பிராமணர் பார்த்து விமோஜனம் செய்வதனால் சீக்கிரம் ஒழிந்து விடும். காரணம் இவர்களைப் பார்த்துத்தான் மற்ற ஜாதியார் காப்பியடித்தார் கள்” - என்றும் தனது வழிமுறையை விளக்கினார் பெரியார். “முடிச்சுப் போட்டவன் அவிழ்த்தால் சீக்கிரம் அவிழ்க்கலாம்“ என்பது வெறும் நயமான சொல வடை மட்டுமல்ல, அதில் வரலாற்று உண்மை இருக்கிறது. சாதியக் கட்டமைப்பைக் கொண்டு வந்ததில் பிராமண-ஷத்திரியர் எனும் இரு ஆளும் வர்ணங்களுக்கும் பங்கிருந் தது. ஆனால் சமூக ரீதியில் அதை நிலைநிறுத்தியதும், வழிகாட்டியதும் பிராமணப் பண்டிதர் களே என்பதைக் கண்டு வந்தோம். போலச் செய்தல் என்கிற முறையில் பிறரும் அந்தப் பாதையில் நடைபோட்டார்கள்.


(தொடரும்)


No comments:

Post a Comment