பெரும் பணக்காரர்களின் வரவை எதிர்பார்த்தோ, செல்வந்தர்கள் வாரி வழங்குவார்கள்என்று எண்ணியோ அய்யா இயக்கத்தை நடத்தவில்லை.
மக்கள் பங்களிப்பே இயக்கத்துக்கு இரத்தவோட்டம் என்பது அவரின் கருத்தாகும்.
இதோ ஒரு பை (அதனை எடுத்துக் காட்டினார் ஆசிரியர்) வாடிப்பட்டி கழகத்தின் சார்பாக அளிக்கப்பட்ட பண முடிப்புக்கான பை (சிகப்பு வண்ணம் - வெள்ளை எழுத்துக்கள்) 1001 ஓரணாக்கள் (16 அணா ஒரு ரூபாய் அந்த வகையிலே ரூ.62 மதிப்பு) தந்தை பெரியாருக்கு 28.1.1940 அன்று வாடிப்பட்டி திராவிடர் கழகத்தால் கொடுக்கப்பட்டது. அந்தப் பையைக் கூடப் பத்திரமாகப் பாதுகாத்து வைத் துள்ளார் நமது அன்னை மணியம் மையார். இப்படியெல்லாம் காலணா, காலணாவாக, ஓரணா ஓரணாவாக கொடுக்கப்பட்ட பணத்தை யெல்லாம் முடிச்சுப் போட்டு வைத்து சேர்த்துதான் இயக்கத்தை நடத்தினார். இயக்கத்துக்குச் சொத்துச் சேர்த்தார் தந்தை பெரியார்
நெருக்கடி நிலை காலத்தில் வருமான வரித்துறையினர் வாடகை மூலம் வரும் வருமானத்தை எல்லாம் 'அட்டாச்' செய்தார்கள். வருமான வரித்துறை அதிகாரியைச் சந்தித்துப் பேசியபோது, அவர்கள் சொன்னது என்ன? 'விடுதலை'யை நிறுத்தி விடுங்கள் - பிரச்சினை தீர்ந்து விடும் என்றார்களே.
அது எந்தக் காலத்திலும் நடக்காத ஒன்று என்று சொன்னேன். உங்கள் சொத்துக்கள் எல்லாம் வருமான வரித் துறைக்கு வந்து விடும் என்று மிரட்டிய போதுகூட நான் என்ன சொன்னேன்?
பொது மக்கள் மத்தியில் துண்டேந்தி பிச்சை எடுத்தாவது 'விடுதலை'யை நடத்துவோம். கேட்டால் எம் மக்கள் கொடுப்பார்கள் என்று கூறினேன் என்றார் கழகத் தலைவர் - அப்பப்பா மெய்ச் சிலிர்க்கிறது.
(1975 இல் ஒரு நெருக்கடி காலம் - அதனைக் கடந்து வந்தோம் - இப்பொழுது கரோனாவால் ஒரு நெருக்கடி - அதையும் வென்று காட்டியுள்ளோம். 'விடுதலை' இணையத்தின் மூலமாக வீறு நடைபோட்டுக் கொண்டுதான் இருக்கிறது. முன்பைவிட விடுதலைக்கு வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித் துக் கொண்டுதான் இருக்கிறது என்பது தமிழ்ச் சமுதாயம் அளிக்கும் நற் செய்தியே!)
தந்தை பெரியார் மறைந்தார். அதன் நான்கு ஆண்டுகள் கழித்து அன்னை மணியம்மையாரும் மறைந்தார்கள்.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை கொண்டாடினோம். ஒரு ரூபாய் டிக்கெட் அடித்து நன்கொடை திரட்டினோம். விழாவை வெகு சிறப்பாக நடத்தவில்லையா?
உயர்நீதிமன்றத்தில் வழக்கு - வழக்கு நிதி என்று அறிவித்தோம். முதன் முதலில் காரைக்குடியில் தான் ஆரம் பிக்கப்பட்டது. ஒரு ரூபாய் நன்கொடை திரட்டல்; பட்டாணி விற்கும் ஒரு தோழர் 50 காசுகள் கொண்டு வந்து மேடையில் கொடுத்தார். அப்பொழுது நான் சொன் னேன் "50 ரூபாய் கொடுத்ததை விட இந்த 50 காசுக்கு அதிக மதிப்பு'' என்று சொன்னேன்.
'விடுதலை என்பது நமது போர் ஆயுதம் - அதன் முனை ஒரு போதும் மழுங்காது; இளைஞர்கள் கையில் அந்தப் போர் ஆயுதம் இருந்து கொண்டே இருக்கும் - இருக்க வேண்டும்.
நம் இளைஞர்கள் இப்பொழு தெல்லாம் சிறப்பாக எழுத ஆரம்பித் துள்ளனர். எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது - இதனை மகிழ்ச் சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
என் குடும்பம் குறித்துக் கூறினார்கள். நான் குடும்பத்தைவிட்டு விலகிட வில்லை. என் குடும்பம் விரிந்து இருக் கிறது. இயக்கக் குடும்பமெல்லாம் என் குடும்பம் - இயக்கக் குடும்பத்தில் நான் இருக்கிறேன் அவ்வளவுதான்.
என் இறுதி மூச்சு அடங்கும்வரை என்னிடமிருந்து பிரிக்க முடியாதது. 'விடுதலை'. அந்த மூச்சை உங்களிட மிருந்து, மக்களிடமிருந்து பெறுகிறேன்.
கரோனா கடுமையாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தக் கால கட்டத்தில், ஊரடங்கு உள்ள நிலையில் என் சகத் தோழர்கள் ஒன்றுபட்டு 'விடுதலை' அன்றாடம் வெளிவர உழைத்துக் கொண்டு இருக் கிறார்கள். தடுமாற்றம் இல்லை - தட மாற்றமே! - தொடர் மின்சாரம் என்ற வகையில் நடந்து கொண்டு இருக்கிறது. எனது விடுதலை சக தோழர்களுக்கு என் கனிவான அன்பு!
கரோனா காலத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள். அனைவருக்கும் என் அன்பு வேண்டுகோள்!
- காணொலியில்
'விடுதலை' ஆசிரியர்
No comments:
Post a Comment