தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது
நியாயமான சில கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போது பல கட்சித் தலைவர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். நானும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததுடன், அரசு இதில் கவுரவம் பார்க்காமல், டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தினார் எனினும், போராட்டத்தில் முக்கியமாக இருந்த 118 டாக்டர்கள் வெவ்வேறு இடங்களில் மாற்றப்பட்டனர்.
இது ஒரு தவறான அணுகுமுறை - ஏற்கெனவே பணியாற்றிய இடங்களில் மீண்டும் அவர்களை பணியமர்த்தம் செய்ய வேண்டும் என்று, வலியுறுத்தி வந்தோம். 'விடுதலை'யிலும் பல முறை இதுகுறித்து எழுதப்பட்டும் வந்தது. உயர்நீதிமன்றமும் அந்த வகையிலேயே தமிழ்நாடு அரசை வலியுறுத்திய போதிலும், அரசு மவுனம் சாதித்து வந்தது.
இந்த நிலையில் நேற்று 118 மருத்துவர்களையும் கூடுமான வரை ஏற்கெனவே பணியாற்றிய இடங்களில் நியமன ஆணையைப் பிறப்பித்தது - வரவேற்கத்தக்கது.
தங்களுக்காகக் குரல் கொடுத்த கழகத்திற்கும், 'விடுதலை'க்கும் டாக்டர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. பாராட்டுகள், வாழ்த்துகள்.
- கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
14.6.2020
No comments:
Post a Comment