புதுடில்லி,ஜூன்15, இந்தியாவில் கரோனா மற்றும் ஸ்பானிஷ் ஃப்ளூ ஆகிய நோய்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்ள பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ''பெருந்தொற்று காலத்தில் நாட்டின் விவசாய சமூகத்தின் மீதான தாக்கம் எப்படி இருந்தது என்பதைக் கூரிய முறையில் பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியம். இதுகுறித்து உயர்கல்வி நிறுவனங்கள், தாங்கள் தத்தெடுத்த அல்லது அருகிலுள்ள 5 முதல் 6 கிராமங்களில் ஆய்வு மேற் கொள்ள வேண்டும். இந்தியாவில் 2020இல் தொற்றிய கரோனா வைரஸ் மற்றும் 1918-ல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ ஆகிய நோய்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஒப்பீட்டு ஆய்வு மேற் கொள்ள வேண்டும்.
கோவிட்-19 நோய் குறித்து கிராமத்தினருக்கு விழிப் புணர்வு உள்ளதா, அவர்கள் பெருந்தொற்று காலத்தில் சந்தித்த சவால்கள், அவற்றைக் கிராமத்தினர் எதிர்கொண்ட விதம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல ஸ்பானிஷ் ஃப்ளூ ஏற்படுத்திய பிரச்சினைகள் மற்றும் அவற்றில் இருந்து மீண்டு பொருளாதாரத்தை இந்தியா மீட்டெடுத்தது எப்படி என்பது குறித்தும் ஆய்வு மேற் கொள்வது அவசியம். பல்கலைக்கழகத் துணை வேந்தர்களும் கல்லூரி முதல்வர்களும் ஆய்வுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வு முடிவுகளை ஜூன் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்''. இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment