கோவிலா - குடியும் கூத்தடிக்கும் இடமா?
விருத்தாசலம்: கோவில் நந்தவனத்தில், ஊழியர்கள் மது அருந்தி, மாமிசம் சாப்பிடும் வீடியோ வெளியாகி உள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில், அறநிலைய துறை கட்டுப்பாட்டிலான, கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் உள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், பக்தர்கள் தரிசனத்திற்கு தடையுள்ளது. வழக்கமான பூஜைகள், துப்புரவு பணிகளை மேற்கொள்ள, அறநிலைய துறை ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர், அங்குள்ள நந்தவனத்தில் அமர்ந்து மது அருந்தியபடி, மாமிசம் சாப்பிடுகின்றனர். ஒரு ஊழியர், மற்றவர்களிடம் மான்கறி சாப்பிடுங்கள் என்று கூறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான காட்சிகளை, அறநிலைய துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கும் அனுப்பியுள்ளனர். சமீபத்தில், பழநி முருகன் கோவிலில், மது அருந்திய காவலர்கள் இருவரை அறநிலைய துறை அதிகாரிகள், 'டிஸ்மிஸ்' செய்தனர். அதேபோல, மணவாளநல்லூர் கோவிலில், மது, மாமிசம் சாப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஊரடங்கால் கோவிலுக்குள் செல்ல முடியாமல், பக்தர்கள் தவித்து வரும் நிலையில், கோவில் ஊழியர்களின் செயலை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நன்றி: ‘தினமலர்', 16.8.2020
No comments:
Post a Comment