பெரியார் பிறந்த நாள் கவிதை
அடுக்குகளான வருண அமைப்புகளில்
கடைக்கோடியில் "அவள்" இனமாம்!
அடிமை வாழ்வே அப்பிறவி பலனாம்!
இழிவுற்ற மடந்தையர் இசைபெறவே
இதோ ஈரோட்டில் எழுந்ததொரு விடிவெள்ளி!
ஆணாகப் பிறந்தவர் ஆனாலும்
"ஆண்மை" பதமொழித்த ஆச்சரியக்குறி!
குருட்டுத்தனமும் மிகு கோழைத்தனமும்
பயிற்றுவிக்கும் மத நூலா பெண்கல்வி?
பொங்கியெழும் பெருந்தழலாய் பழங்கேட்டை
பொசுக்கியது பெரியாரின் எதிர்க்கேள்வி!
அதிர்வூட்டும் வெடிகுண்டாய் வினா தொடுத்தார்
ஆணவ ஆதிக்கக் கோட்டை கிடுகிடுக்க!
அடிமையாய் ஆக்கி வைத்தல் பெண்ணை
அவமானம் இல்லையா ஆடவருக்கு?
கருப்பையே மாதர்க்கு சிறையானால்
களைந்தெறிதல் என்ன குற்றம்?
வெறிகொண்டு நெருங்குவோரை துரத்திவிட
பெற வேண்டும் தேகப்பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும்!
கரண்டியைப் பிடுங்கி எறிந்து
கல்வியைப் புகட்ட வேண்டும்!
எலிகளைப் பூனைகள் விடுவிக்கும்
நிலைவரினும் பெண்டிர்க்கு விடிவுண்டோ?
பெற்ற தாயினும் பரிந்துருகிய
பெண்ணினக் காவலரே! பெருமதியே!
ஆணுக்குள்ளது பெண்ணுக்கும் உரிமையென
அகழாய்ந்து மொழிந்த தந்தையே,
பேதைகள் வாழ்வை உய்விக்க வந்த- உம்
பாதையொன்றே எமக்கு போதுமய்யா!
பெரியார் விழா, பெண்களின் நன்றித் திருவிழா!
- ம. கவிதா, (திருப்பத்தூர் மாவட்ட
திராவிடர் கழக மகளிரணி தலைவர்)
No comments:
Post a Comment