தன் இனிய குரலால் இசையென்னும் இன்பத்தை அனைவருக்கும் வாரி வழங்கிய இசை உலகின் இணையற்ற பாட்டுத் திறனாளி எஸ்.பி.பாலசுப்பிர மணியம் அவர்கள் கோவிட் நோய்த் தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 25.09.2020 அன்று பிற்பகல் 1 மணியளவில்) காலமானார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் நலம் பெற்றுத் திரும்பி மீண்டும் தன் இசையின்பத்தை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற நமது விழைவைத் தெரிவித்திருந்தோம்.
எனினும், இயற்கையின் கோணல் புத்தி நம்மிடமிருந்து அவரைப் பறித்துவிட்டது. பல்லாயிரம் பாடல்கள் மூலம் நம்மை ஈர்த்த உலகச் சாதனையாளர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல மொழிகளிலும் பாடல்களைப் பாடி, உலகெங்கும் உள்ள மக்கள் உள்ளங்களைத் தன் பாட்டுத் திறத்தால் வென்றவர். பாடல், இசை, பின்னணிக் குரல், நடிப்பு என திரைத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தியவர். அவரது குரலால் என்றும் வாழ்வார்!
அவரது மறைவால் வாடும் அவரது இணையர், மகன், மகள், குடும்பத்தினர், திரைத் துறையினர், அவரது இசை விரும்பிகள் அனைவருக்கும் நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
25.9.2020
No comments:
Post a Comment