தி.மு.க.வின் மேனாள் நாடாளு மன்ற உறுப்பினராகவும், சிறந்த மருத்துவ ராகவும், உயர்ந்த மனிதராக வும் திகழ்ந்த டாக்டர் ஏ. கலாநிதி எம்.டி. (வயது 80) அவர்கள் நேற்று (18.9.2020) மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்து கிறோம்.
சில நாட்களுக்கு முன் அவரது வாழ்விணையர் காலமானார் என்பதும் மிகவும் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்றாகும்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் திகழ்ந்தவர்; சீரிய பண்பாளர், எவரிடத்திலும் எளிமையாகவும், அன்புடனும் பழகும் பான்மையர்.
அவரது டில்லி இல்லம் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் நம்மைப் போன்றவர்களுக்கும், நாஞ்சிலார் போன்றவர்களுக்கும், கழகத் தவர்களுக்கும் 'ஒரு விருந்தினர் மாளிகை' போல் பயன்பட்ட ஒன்று. அவ்வளவு சிறந்த - விருந்தாளிகளை உபசரிப்பவரும் ஆவார். நாடாளுமன்றத்தில் கடைசிவரை அமர்ந்து நடவடிக்கை களில் பங்கு பெற்ற டாக்டர்கள் - தி.மு.க. உறுப்பினர்கள், டாக்டர் ஏ. கலாநிதி அவர்களும், டாக்டர் வெ. குழந்தைவேலு அவர்களும் ஆவார்கள். தொண்டுள்ளம் படைத்தவர்.
டாக்டர் கலாநிதி அவர்கள் மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; மருத்துவ உலகத்திற்கு மட்டுமல்ல; மனிதநேய உலகுக்கே மாபெரும் இழப்பாகும்.
அவரது மறைவால் துயருறும் - அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிக்கின்றோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்.
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.9.2020
No comments:
Post a Comment