கரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய முதல்வர் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 19, 2021

கரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய முதல்வர் உத்தரவு

சென்னை, மே 19 கரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் உயிர்காக் கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்த வர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி தினசரி பதிவாகிவரும் நிலையில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள், தடுப்பூசி ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இவற்றை தமிழகத் துக்கு தருவிக்க பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்துள்ளது. இதற்கிடையில் இவற்றை தமிழகத்திலேயே தயாரிக் கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத் துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு 18.5.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியா வசியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், ஒரு நிரந்தர தீர்வாக தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை தொடங்க முதல்வர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்கவும் தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தர விட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அளிக்கும். மேலும் குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் இந்த ஆலைகளை நிறுவும். இதற்காக விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விருப்பக் கருத்துகளை வரும் மே31ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அவ்வாறு பெறப்படும் விருப்பக் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு ஆக்சிஜன், தடுப்பூசிகள், உயிர்காக்கும் மருந்துகள் உற்பத்தி கட்டமைப்புகளை விரைவில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment