தடுப்பூசிகளும் தமிழ்நாட்டின் நவீன மூட நம்பிக்கைகளும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

தடுப்பூசிகளும் தமிழ்நாட்டின் நவீன மூட நம்பிக்கைகளும்

இந்தியாவிலேயே அதிகளவில் குழந்தைகளுக்கு அரசு பரிந்துரைக்கும் எல்லா தடுப்பூசிகளையும் ஒழுங்காக தவறாமல் போடும் வரலாறு கொண்டது தமிழ்நாடு. இதில் ஏழை- - பணக்காரன் படித்தவன் -- படிக்காதவன் கிராமத்தான் -- நகரத்தான் என்று எந்த வித்தியாசமும் இல்லை.

இந்த பெருமையெல்லாம் 2009- - 2010 வரை மட்டுமே. 2009 மத்தியில் இங்கு எழுந்த இயக்கங்கள்  பண்பாடு மீட்பு, கலாச்சார மீட்பு என்று பேச ஆரம்பித்து மண்ணின் மரபுகளை மீட்கிறோம் என்று வளைந்து கடைசியாக தடுப்பூசிக்கு எதிராக வந்து நின்றது. இதன் நடுவே Youtube & Whatsapp வழியே இந்த எதிர்ப்பை தமிழ்நாடு முழுக்க சென்று சேர்த்தனர் சில கிறுக்கர்கள். இதன் ஒட்டுமொத்த பாதிப்பும்  MMR Vaccine போட தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு சென்ற போது தான் வெளிவந்தது. நான் சுமார் 2500 ரூபாய் செலவில் என் மகளுக்கு போட்ட இந்த தடுப்பூசியை, சில வருடங்கள் கழித்து அவள் படித்தப் பள்ளியில் அரசே இலவசமாக போட வந்த போது அப்பள்ளி பெற்றோர்கள் இடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பை சந்தித்தது. இத்தனைக்கும் இந்த தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் எல்லாருமே மெத்த படித்தவர்கள், பெரும்பாலும் அய்.டி. துறையில் பணிபுரிபவர்கள். எல்லாருமே தங்கள் எதிர்ப்புக்கான ஆதார ஆவணமாக காண்பித்தது எல்லாமே Whatsapp  தான். 2020இல் இந்தியாவுக்குள் கரோனா நுழைந்தது. மத்தியரசு மாநில சுகாதாரத்துறையின் அதிகாரத்தை பறித்துக்கொண்டு தடுப்பூசி விநியோகத்தை கட்டுப்படுத்தி, முதலில் டாக்டர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் என்று போட்டுவிட்டு, அடுத்ததாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்று அறிவித்தது.

2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நம்மை சூழ்ந்திருந்த பயத்துக்கு செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் இதற்கான தடுப்பூசி வெளிவந்ததும் 45 வயதுக்கு மேற்பட்ட ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதை தேடியலைந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.

தடுப்பூசி மீதான பயமும் அச்சமும் அதன் உச்சத்தை அடைந்துவிட்டதே இதற்கு காரணம்.

இன்று தமிழ்நாடு, அப்பட்டமான அறிவியலுக்கு எதிரான நிலைப்பாட்டில், அதாவது நாமெல்லாம் கேலியும் கிண்டலும் செய்யும் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாருக்கு இணையாகத் தான் கரோனா தடுப்பூசிப் பட்டியலில் இருக்கிறது.

டெங்குவுக்கு மர்மக் காய்ச்சல் என்று பெயர் சூட்டி, அதற்கு நிலவேம்பு தான் மருந்து என்று அரசே சொல்ல ஆரம்பித்த பின்னர் சாமானியன் என்ன செய்துவிட முடியும்?

டெங்குவுக்கு நிலவேம்பு என்றால் கரோனாவுக்கு கபசுரக் குடிநீர்.

தமிழ்நாடு முழுக்க எப்படி இத்தனை நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள்  உடனடியாக தயாரிக்கப்பட்டன?

வருடக்கணக்காக பின்னோக்கி பயணித்ததன் விளைவு கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள உருவாகியுள்ள பரவலான தயக்கம். இதனோடு நடிகர் விவேக் மரணமும் சேர்ந்து விட, கரோனாவின் முதல் அலை முடிந்து இரண்டாவது அலைக்கு பிணங்கள் தமிழ்நாட்டின் பெரு நகர சுடுகாடுகளில் நிரம்பி வழிகிறது. சில வாரங்களுக்கு முன் வடமாநிலங்களில் நாம் கண்ட ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையில் இடப் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை எல்லாம் தமிழ் நாட்டுக்குள்ளும் நுழைந்துவிட்டது.  இந்நிலையில் கரோனா மரணத் திலிருந்து நம்மை காப்பாற்ற தடுப்பூசியால் மட்டுமே முடியும். இருமுறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டாலும் மரணமடையும் வாய்ப்பு அரிதிலும் அரிது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

தமிழ்நாடு மீண்டும் அறிவியல் பாதைக்குத் திரும்பி முழுமை யாக தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்வதே நாம் அனைவருமே உயிர்ப்பிழைக்க நம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே வழி.

- சிவக்குமார்

No comments:

Post a Comment