திராவிட சித்தாந்தத்தின் ஒப்பற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வகுத்தளித்த பாதையில் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 21, 2021

திராவிட சித்தாந்தத்தின் ஒப்பற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வகுத்தளித்த பாதையில் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம்!

தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகம் அமைப்போம்!

சட்டப் பேரவையில் தமிழ்நாடு ஆளுநரின் அரும் பெரும் உரை

16ஆவது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடர்

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்

சென்னை, ஜூன் 21 தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்றுவதற்கு இந்த அரசு உறுதியேற்றுள்ளது.

'எல்லோருக்கும் எல்லாம்' என்ற மாபெரும் சமூக நீதித் தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்குமான அரசாக இந்த  அரசு இயங்கும் என இன்று (21.6.2021) நடைபெற்ற 16ஆவது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் உரையாற்றினார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 16ஆவது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (21.6.2021) காலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.

முன்னதாக சட்டப் ரேபவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள் பேரவைக்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் அவர்களை வரவேற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளுநருக்கு வணக்கம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் அவர்கள் தனது 48 பக்க உரையை ஆங்கிலத்தில்  உரை யாற்றினார். இதையடுத்து சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார்.

சென்னை, ஜூன் 21- திராவிட சித்தாந்தத்தின் ஒப்பற்ற தலைவர், நவீன தமிழ்ச் சமுதாயத்தைச் செதுக்கிய சிற்பி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்தளித்த பாதையில் பீடு நடை போடுவோம் என்றும், தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூக மாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்றுவதற்கு இந்த அரசு உறுதியேற்கிறது  என்று தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்கள் இன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முக்கியமாகச் சிறப்பாகக் குறிப்பிட்டார். உரையில் முக்கிய  அம்சங்கள் வருமாறு:

மாநிலங்களுக்கு சுயாட்சி உண்மை யான கூட்டாட்சியை நிலை நிறுத்தவும் இவ்வரசு உறுதியாக உள்ளது.

கோவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரான பணிகளுக்கே முன்னுரிமை.

தமிழ்மொழியை இந்திய அலுவல் மொழியாக ஒன்றிய அரசு அறிவிக்க வலியுறுத்தப்படும்

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தப்படும்.

  சட்டம்  - ஒழுங்கு நிலை நிறுத்தப்படும். ஜாதி- மதப் பிரச்சினைகள் இல்லாத அமைதியான இணக்கமான சூழலை இந்த அரசு உறுதிப்படுத்தும்.

முதலமைச்சருக்கு - பொருளாதார ஆலோசனை களை வழங்கிட நிபுணர் குழு.

வேளாண்மைக்குத்

தனி நிதி நிலை அறிக்கை

வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதி நிலை அறிக்கை.

உழவர் சந்தைக்குப் புத்துயிர் அளிப்பு.

2021-2022ஆம் ஆண்டில் 125 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி இலக்கு.

தமிழ்நாட்டிற்குக் கேடு விளைவிக்கும் மேகதாது திட்டத்தை நிராகரிக்க ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

காவிரி - குண்டாறு இணைப்புத்திட்டம் செயல்படுத்தப்படும்.

கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.

நீட் தேர்வை நீக்கிட சட்டம்

'நீட்' தேர்வை நீக்கிட சட்டம் நிறை வேற்றப்படும்.

  அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப் பொலிவு பெறும்.

ரூ.70 கோடி செலவில் மதுரையில் சர்வதேசத் தரத்தில் முன்னாள் முதல மைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் பொது நூலகம் கட்டப்படும்.

வேலை வாய்ப்புகளை உருவாக்கிட தொழில் நிறுவனங்கள்.

  உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப் படும்.

புறநகர்ப் பகுதிகளில் நவீன வசதி களுடன் துணை நகரங்கள் உருவாக்கப் படும்.

சிங்கார சென்னை 2.0 எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

   சென்னைப் பெரு நகர வெள்ள நீர் மேலாண்மைக் குழு உருவாக்கப்படும்.

  மதுரவாயல் - சென்னை துறைமுகம் வரையிலான உயர் மட்ட சாலைத் திட்டப் பணி விரைவுபடுத்தப்படும்.

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணி விரைவுப்படுத்தப்படுவதை இவ்வரசு உறுதி செய்யும்.

வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்டம் தோறும் பெண்கள் விடுதிகள்.

தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

வருமான வரம்பு

நீக்கப்பட வேண்டும்

ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் சமூகப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்தவர்களை நிர்ணயிப்பதற்கான வருமான அளவுகோல்களை நீக்கவும், அவை நீக்கப்படும் வரையில் தற்போதைய வருமான வரம்பினை 8 லட்சம் ரூபாயி லிருந்து  ரூ.25 லட்சம் வரை உயர்த்திட ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்.

அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப் படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பப்படும்.

எல்லார்க்கும் எல்லாம்

எனும் சமத்துவம்

சிறுபான்மையினருக்கான சச்சார் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப் படும்.

'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற மாபெரும் சமூகநீதித் தத்துவத்தின் அடிப் படையில் அனைவருக்குமான அரசாக இந்த அரசு இயங்கும். ஒரு கட்சியின் அரசாக அமையாமல்  இல்லாமல் மக்களின் அரசாக நடைபோடும்.

தந்தை பெரியார் காண விரும்பிய

சுயமரியாதைச் சமுதாயம்

தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்றுவதற்கு இந்த அரசு உறுதியேற் றுள்ளது.

திராவிட சித்தாந்தத்தின் ஒப்பற்ற தலைவர், நவீன தமிழ்ச் சமுதாயத்தைச் செதுக்கிய சிற்பி, முத்தமிழ்  அறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்தளித்த பாதையில் தொடர்ந்து பீடு நடைபோட்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தலை நிமிர்ந்து நோக்கும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம். இந்தியாவின் ஈடு இணையற்ற  மாநிலம் இன்பத் தமிழ்நாடுதான் என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.

- என்று ஆளுநர் தம் உரையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment