சென்னை,ஆக.6- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’திட்டத்தை ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (5.8.2021) தொடங்கி வைத்தார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’என்ற திட்டத்தின் தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ்மொழியில் நடத்தப்பட்ட வழிபாட்டையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், கபாலீஸ்வரர் கோயிலின் தக்கார் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை செய்ய உள்ள குருக்களின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் பதாகைகளில் வைக்கப்பட்டுள்ளன. தமிழில் அர்ச்சனைசெய்ய விரும்பும் பக்தர்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
மேலும் விரிவுபடுத்தப்படும்
இதனைத்தொடர்ந்து, முதல்கட்டமாக வடபழனி முருகன் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 47 பெரியகோயில்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள539 முக்கிய கோயில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
ஆடி மாத திருவிழாக்களை மனதில் வைத்துதான் சில கோயில்கள் மூடப்பட்டு உள்ளன. கரோனா காலகட்டத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் வந்தால், அந்த வழிபாட்டுத்தலங்களும் மூடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறன் போட்டி
சென்னை, ஆக.6 பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் திறன் போட்டியான எச்.சி.எல் ஜிக்சாவின் முதல் பதிப்பு, இளம் (6வகுப்பு முதல் 9வகுப்பு வரை) மாணவர்களின் 21 ஆம் நூற்றாண்டின் முக்கியமான திறன்களை மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதன்மையான உய்ய நிலை காரண ஆய்வு போட்டியின் 12 வெற்றியாளர்களை அறிவித்தது.
இந்தியாவின் தலைசிறந்த இளம் சிக்கல் தீர்வாளர்கள் என முடிசூட்டப்பட்ட வெற்றியாளர்கள், போட்டியின் போது தீர்க்க வேண்டிய நிஜ உலகப் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகள் மூலம் விதிவிலக்கான சிக்கல் தீர்க்கும் மற்றும் உய்ய நிலை காரண ஆய்வு திறன்களை வெளிப்படுத்தினர்.
மொத்தம் 12 வெற்றியாளர்களில், சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் மூன்று பேரான நித்திகா. (8ஆம் வகுப்பு), சாய் அருண் பிரசாத் (6ஆம் வகுப்பு) மற்றும் யுவன்குமார் எஸ் (6ஆம் வகுப்பு) இந்தியாவின் தலைசிறந்த இளம் பிரச்சினையைத் தீர்வாளர்கள் என அறிவிக்கபட்டனர்.
வெற்றியாளர்களை வாழ்த்தி பேசிய எச்.சி.எல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டமுறை தலைவர் சுந்தர் மகாலிங்கம் கூறியதாவது "கடுமையாக போட்டியில் போராடி வெற்றிபெற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். எச்.சி.எல் இல், தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் திறனைப் பெருக்க உதவுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.எச்.சி.எல் ஜிக்சா போட்டியின் மூலம் 21 ஆம் நூற்றாண்டு திறன்களை இளைஞர்களிடையே மேம்படுத்தி, நாளைய தலைவர்களாக வளர உதவுவதற்கான ஒரு முயற்சியாகும் என அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment