கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம், செப்.6 காவல்துறையினர் முன்னால் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் காவலர்கள் மரியாதை யுடன் நடத்த வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்தவர் அணில் குமார். இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது;-
இரு நாட்களுக்கு முன், 16 வயது மகளுடன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தேன் அப்போது வழிமறித்த சேர்தலா காவலர்கள் விசாரணை என்ற பெயரில், அவமரியாதையாக என்னை பேசினர்.
குறிப்பாக, என மகளின் முன் ‘எடா... வா, போ’ என, மரியாதைக் குறைவாகவும் இழிவாகவும் பேசினர். பொது மக்களை கவுரவமாக நடத்த காவல்துறையினருக்கு நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்‘ எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் காவலர்கள் பொதுமக்களை பல்வேறு இடங்களில் மிகவும் மோசமாக நடத்துவதாக புகார்கள் வருகின்றன. எக்காரணம் கொண்டும் பொதுமக்களை காவலர்கள் தரக்குறைவான வகையில் நடத்தக்கூடாது.
காவல்துறையின் முன்னால் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் காவலர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும்.பொதுமக்களை அநாகரீகமாக நடத்துவதை நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, கேரளா முழுவதும் காவலர்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை ‘வா, போ’ என ஒருமையில் அழைத்து பேசக் கூடாது. ‘எடா... எடீ...’ மற்றும் ‘வாடி... போடி’ என்பது போன்ற வார்த் தைகளை பயன்படுத்தி அழைக்கக்கூடாது. இது தொடர்பாக கேரள காவல்துறை இயக்குநர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப் பிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து உடனடியாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.
சென்னை உள்பட 12 உயர்நீதிமன்றங்களுக்கு
68 நீதிபதிகள் : கொலீஜியம் பரிந்துரை
சென்னை, செப்.6 சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களுக்கு 4 வழக்குரைஞர்களை நியமிக்க கொலிஜீயம் பரிந்துரை செய்து உள்ளது.
இந்திய தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் 12 மாநில உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்க 44 வழக்குரைஞர்கள் மற்றும் 24 நீதித்துறை அதிகாரிகள் உள்பட 68 பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக நியமிக்க 10 பெண் வழக்குரைஞர்களையும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது
ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் அலகாபாத், ராஜஸ்தான், கொல்கத்தா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், சென்னை, மத்தியப் பிரதேசம், கருநாடகா, பஞ்சாப் மற்றும் அரியானா, கேரளா, சத்தீஸ்கார் மற்றும் அசாம் ஆகிய உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்படுவார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களுக்கு 4 வழக்குரைஞர்களை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்து உள்ளது.
சுந்தரம் சிறீமதி, டி.பாரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகம்மது ஷாபிக் என 4 பேரை பரிந்துரைத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, 60 ஆக உயரும்.

No comments:
Post a Comment