மனிதர்களுடன் பேசும் தாவரங்கள்! அறிவியல் கூறும் வியப்புத் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

மனிதர்களுடன் பேசும் தாவரங்கள்! அறிவியல் கூறும் வியப்புத் தகவல்

பின்லாந்தின் ஆல்டோ பல்கலைக்கழகத் தில் இணைப் பேராசிரியராகவும் ஓவியராகவும் இருக்கும் லாரா பெலாஃபின், தன் செடியின் வேர்ப்பகுதிகளில் ஒரு  ஒலி வாங்கியை (மைக்) பொருத்தி சோதனை செய்தார். மெலிதான, அதிகமான அதிர்வெண் கொண்ட க்ளிக் சத்தங்கள் கேட்டன. இந்த ஒலியின் அதிர்வெண்களை மாற்றுவதற்காக அவர் ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளார். அந்த மென்பொருளின் மூலம் மனிதர்களால் கேட்கக் கூடிய ஒலியாக அந்த க்ளிக் சத்தத்தை மாற்ற முடியும்.

தனது மேசையில் அமர்ந்து லாரா வேலை செய்துகொண்டிருக்கும்போது அந்த செடியில் பொருத்தப்பட்டுள்ள ஒலி வாங்கி தொடர்ந்து ஒலிக்கும்.

அதைத் தொடர்ந்து விநோதமாக ஒன்று நடந்ததுஎன்கிறார் லாரா.அவரது அறைக்கு ஒருவர் வந்தபோது, க்ளிக் சத்தம் நின்றுவிட்டது. வந்த விருந்தினர் வெளியில் சென்றதும் மீண்டும் க்ளிக் சத்தங்கள் கேட்டன. வேறொரு முறை விருந்தினர்கள் வந்தபோதும் க்ளிக் கேட்கவில்லை. அவர்கள் கிளம்பிய பிறகு மீண்டும் சத்தம் கேட்டது. “இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லைஎன்கிறார் லாரா. கிட்டத்தட்ட லாராவுடன் அந்தச் செடி தனியாகப் பேச விரும்பியது போன்ற ஒரு எண்ணத்தை அந்த நிகழ்வு வழங்கியது.

செடிகளிலிருந்து வரும் க்ளிக் ஒலியை சேகரிக்கும் வேலையைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக லாரா செய்துவருகிறார். என்ன நடக்கிறது என்று இன்னமும் தனக்குப் புரியவில்லை என்கிறார். பெரிய செலவில்லாமல் ஒரு கருவியின்மூலம் இதை செய்திருக்கிறார். இந்த க்ளிக் சத்தம் செடியிலிருந்து இல்லாமல் மண்ணிலிருக்கும் நுண்ணியிர்களிலிருந்தும் வந்திருக்கலாம் என்பதை லாரா ஏற்றுக்கொள்கிறார். செடி பேசியதா, ஆட்கள் வந்தபோது அது எதிர்வினை புரிவதற்காகப் பேசாமல் இருந்ததா என்பதெல்லாம் இப்போதைக்கு நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இப்படி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்ற சிறிய சந்தேகமே லாராவுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. “நிஜமாக அப்படி நடக்கிறதா என்பதுதான் கேள்விஎன்கிறார் லாரா.செடிகளைப் பற்றி நமக்குத் தெரியாத விஷயங்கள் அதிகம். பூக்களும் புதர்களும் தங்களுக்குள் எந்த அளவுக்குத் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன என்பதைத் தாவர ஆராய்ச்சியாளர்கள் இப்போது விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அவை தகவல்களைப் பரிமாறிக்கொள்வது நிரூபிக்கப்பட்டால் அவற்றை அறிவுள்ள உயிர்களாக ஏற்க முடியுமா?

செடிகளின் நுணுக்கங்கள் பற்றியும் அவற்றின் திறன்கள் பற்றியும் அறிவியல் புதிதாக எதையாவது கண்டறிந்தபடியே இருக்கிறது. நாம் நினைத்ததை விட செடிகள் சிக்கலான அமைப்பு கொண்டவை என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனாலும் அவை மனிதர்களுடன்பேசும்திறன் கொண்டவை என்ற கருத்து சர்ச்சையானதுதான்.ஆனால் செடிகளுடன் பேசுபவர்கள் இந்த சர்ச்சையை முன்வைத்து தாங்கள் பேசுவதை நிறுத்திக்கொள்வதில்லை.

மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மோனிகா காக்லியானோ உள்ளிட்ட சில ஆராய்ச்சியாளர்கள், செடிகளால் பேசவும் கற்றுக்கொள்ளவும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் முடியும் என்பதைக் குறிப்பிட்டு பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். அவர்களது பரிசோதனைகளைப் படித்துப் பார்த்த லாரா, தனது செடி பேசுவதைக் கேட்க விரும்பி ஒலி வாங்கியை பொருத்தியதாகக் குறிப்பிடுகிறார்.

ஒலி மூலமாக தகவல்களைப் பெறவும் அனுப்பவும் செடிகளுக்கு ஆற்றல் உண்டு என்று காக்லியானோ பல காலமாக சொல்லி வருகிறார். 2017இல் வெளிவந்த ஒரு ஆய்வில், வேர்கள் மூலம் அதிர்வை உணர்ந்து, பூமிக்கடியில் இருக்கும் தண்ணீரை செடிகள் கண்டுபிடிப்பதாகக் குறிப்பிட்டார்.

செடிகளால் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்று காக்லியானோ நம்புகிறார். அதற்குத்தெளிவான ஆதாரம் இருக்கிறதுஎன்கிறார் அவர்.

2012இல் இவர் வெளியிட்ட ஒரு ஆய்வுக்கட்டுரை பலமுறை மேற்கோள் காட்டப்பட்டது. செடிகளின் வேர்களிலிருந்து க்ளிக் சத்தங்கள் வருவதாக காக்லியானோவின் குழு தெரிவித்தது. வேர் நுனிகளில் லேசர் வைப்ரோமீட்டரைப் பொருத்தி, அதன்மூலம் க்ளிக் ஒலி கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வகத்தில் ஒரு தண்ணீர்த் தொட்டியில் வைத்த வேர்களிலிருந்து இந்த சத்தம் வந்ததால், க்ளிக் ஒலி முழுக்க முழுக்க வேர்களிலிருந்தே வந்ததாகவும் உறுதியாகத் தெரிவிக்கிறார் காக்லியானோ. இந்த சத்தங்கள் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகின்றனவா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதே போன்ற அதிர்வெண் உள்ள ஒலியை நோக்கி செடிகள் தங்கள் வேர்களைத் திருப்புவதாகவும் காக்லியானோ சொல்கிறார்.

இதன் பொருள் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பரிசோதனைகளின்போது செடிகள் தன்னுடன் நேரடியான சொற்களில் பேசுகின்றன என்று கூறி பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் காக்லியானோ.

இது அறிவியல் உலகுக்கு அப்பாற்பட்டதுஎன்று அனுபவத்தை விவரிக்கும் காக்லியானோ, ஆய்வகக் கருவிகளின் மூலம் தான் கேட்ட ஒலிகளை மூன்றாவது மனிதர் ஒருவரால் அளக்க முடியாது என்று கூறுகிறார். ஆனால் பல நேரங்களில் செடிகள் தன்னுடன் பேசியதாக உறுதியாகக் கூறுகிறார். “நான் மட்டுமல்ல, என்னுடன் அங்கே இருந்த பலரும் இதைக் கேட்டிருக்கிறார்கள்என்கிறார். “செடிகளும் நம்முடன் பேச விரும்பு கின்றவோ என்னவோ. யாருக்குத் தெரியும்?” என்கிறார் லாரா.

No comments:

Post a Comment