ஆர்.எஸ்.எஸ். உண்மைக் குதிரை அல்ல - பொம்மைக் குதிரைதான் - கவிஞர் நந்தலாலா
பெரியார் கொள்கைகளை ஆசிரியர் எளிய நடையில் எழுதியிருக்கிறார் - நம் சீனிவாசன்
திருச்சி, அக்.4 திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகங்கள் வெளியீட்டு விழா திருச்சி புத்தூர், பெரியார் மாளிகையில், அன்னை மணியம் மையார் அரங்கில் நேற்று (3.10.2021) மாலை 6.30 மணிக்கு மாவட்டத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மலர்மன்னன் வரவேற்புரையாற்றினார். பெரியார் வீரவிளை யாட்டுக் கழக தலைவர் பேராசிரியர் சுப்ரமணியம் அறிமுக உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நூலினை அறிமுகம் செய்து பெரியார் உயராய்வு மய்ய இயக்குநர் பேரா. நம்.சீனிவாசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா ஆகியோர் உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை”, “கற்போம் பெரியாரியம்”, “திராவிடம் வெல்லும்” மற்றும் ஒன்றிய “பாஜக ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி” ஆகிய நான்கு நூல்கள் வெளியிடப்பட்டது.
கவிஞர் நந்தலாலா
ஆர்எஸ்எஸ் என்னும் ட்ரோஜன் குதிரை நூலினை அறிமுகம் செய்து கவிஞர் நந்தலாலா பேசுகையில், ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பு பொய்களால் கட்டப்பட்ட கோட்டை ஆசிரியர் எழுதிய இந்த புத்தகம் உடைத்து தூள் ஆக்குகிறது. உதாரணம் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஒரு 'தலித்' எப்படி தாழ்த்தப்பட்டோருக்கு விரோதமானது என்பதை நேரில் அனுபவித்து அவர் எழுதிய 'அய் குட் நாட் பை ஏ ஹிந்து' புத்தகத்தை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ்.அய் இந்த நூல் அம்பலப்படுத்தி இருக்கிறது. அதுபோலவே சமூக நீதி, தமிழ் பற்று, பிற்படுத்தப்பட்டோருக்கான ஆதரவு என்ற தமிழ்நாட்டு சூழலுக்கு ஏற்ப ஆர்எஸ்எஸ் தன்னை முன் நிறுத்தும் தந்திரத்தை விவேகானந்தரையும் மோடியையும் முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகள்! குதிரை என்பது மரத்தால் செய்யப் பட்ட குதிரை பொம்மை தான் அதுபோலவே ஆர்.எஸ்.எசும் உண்மைக் குதிரை அல்ல - பொம்மைக் குதிரை தான் என்று பேசினார்.
பெரியார் கொள்கைகளை ஆசிரியர் எளிய நடையில் எழுதியிருக்கிறார் என பெரியார் உயராய்வு மய்ய இயக்குநர் பேராசிரியர் நம். சீனிவாசன் உரையாற்றினார்.
தமிழர் தலைவருக்கு இரண்டு கோரிக்கைகள்
இவ்விழாவில் கவிஞர் நந்தலாலா தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும். நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு அய்யா தந்தை பெரியார் தான் 'சிவாஜி' என்று பட்டம் சூட்டினார். திருச்சி பாலக்கரையில் சிவாஜி சிலை அமைக்கப்பட்டும், பல ஆண்டுகளாக இன்னமும் திறக்கப்படாமல்இருந்து வருகிறது. அதையும் திறப்பதற்கும் ஆசிரியர் அவர்கள் ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
ரூ. 68 ஆயிரத்திற்கு நூல்கள் விற்பனை
இந்நூல் வெளியீட்டு விழாவில் 136 தொகுதிகள் ரூ. 68 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
கலந்து கொண்டோர்
இவ்விழாவில் மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகர், மண்டலத் தலைவர் நற்குணம், மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், லால்குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து, பொறியாளர் சண்முகவடிவேல், மதிமுக புலவர் முருகேசன், அரங்கநாயகி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா, திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன், செயலாளர் இரா.தமிழ்ச்சுடர், மாநகரத் தலைவர் துரைசாமி, திருவரங்கம் நகரத் தலைவர் கண்ணன், ப.க. தலைவர் மதிவாணன், மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர்கள் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்டச் செயலாளர் இரா.மோகன்தாஸ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment