"பேயாளும் ஆட்சியில் பிணம் தின்னும் கழுகுகள்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

"பேயாளும் ஆட்சியில் பிணம் தின்னும் கழுகுகள்!"

.பி. கொடூரம் குறித்து ஆங்கில ஏடுகளின் அலசல்கள்!

லக்னோ, அக்.10 மனிதாபிமானம்  கொஞ்சமேனும் இருக்கும் எவரும் கேட்டாலே மனம் பதைக்கும் படுபாதகச் செயல் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி நகரில் அக்டோபர் 3.10.2021 பட்டப் பகலில் ஈவிரக்கமில்லாமல் நடந்தேறியது.

விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ரத்துசெய்யக் கோரி ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக லக்கிம்பூர் கேரியில் நடந்த  போராட்டத்தில்  பங்கெடுத்துத் திரும்பிக் கொண்டிருந்த விவசாயிகள் கூட்டத்திடையே காரை ஓட்டி எதிர்ப்பட்டவர்களைத் தூக்கி வீசி விட்டுச் சென்றதில் எட்டுப் பேர் இறந்தார்கள். காரில் ஒன்றிய துணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் இருந்தார்.

"எல்லாமே அரசியலாகிவிட்ட காலத் தில் இப்படி ஒரு நிகழ்வு அரசியல் பாரபட் சங்களூடாகத்தான் பார்க்கப்படுகிறது. நடந்தது விபத்து, என்ன நடந்தது என்று விசாரணை செய்து முடிவு தெரியும்வரை எதையும் திட்டவட்டமாக கூற முடியாது, பேரணி சென்றவர்கள் கல் வீசியதற்குப் பின் ஓட்டுநர் நிலை தடுமாறி ஓட்டினார்" என்றெல்லாம் பாஜக ஆதரவாளர்கள் மனசாட்சி இன்றி  வாதிட்டார்கள்.

பொதுவாக உண்மை இரண்டு  எல்லை களுக்கு நடுவே இருக்கும் என்பார்கள். இந்நிகழ்வில் அது பொய்த்தது. உண்மை ஒரு பக்கமே இருக்கிறது. அதை மறுப்பதில் அரசியலும், மனச் சாய்வுகளும் இருக்கின்றன. விவசாயிகள் படுகொலைக்குள் செல்லும் முன் ஓர் அமெரிக்க உதாரணம்.

2017ஆம் ஆண்டு ஆகஸ்டு 11-12ஆம் தேதிகளில் வெர்ஜீனியா மாநிலத்தில் சார்லட்ஸ்வில் நகரில் வெள்ளை இனவாத நம்பிக்கையுடையோர் “Unite the Right”  என்ற முழக்கத்துடன் பேரணி நடத்தினார்கள். அவர்களுக்குப் போட்டியாக இடது சாரியினரும், மற்றவர்களும் இன்னொரு பேரணி நடத்தி எதிர் முழக்கமும் எழுப்பினார்கள். அப்போது ஒரு கார் கூட்டத்திடையே சீறிப் பாய்ந்தது. ஒருவர் இறந்தார், 19 பேர் காயமுற்றனர். அரசியல் ரீதியாக நாடு பிளவுப்பட்டிருக்கிறது என்று அமெரிக்கர்களுக்குத் தெரியும். ஆனால் இத்தகைய வன்முறை எதிர்வினை, அதுவும் இப்படி வெளிப்படையாக நடந்தது பரவலான அதிர்ச்சியை அளித்தது. அப்போதும்

30 விழுக்காடு ரிபப்ளிக் கட்சியினர், குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் எதிரொலித்து கூறியது, வன்முறைக்கு இனவாதச் சாரார் பொறுப்பில்லை என்று கருத்துக் கணிப்பில் சொன்னார்கள்.

வன்முறை நடந்த அன்று மாலை ட்ரம்ப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பத்திரிகையாளர்கள் கேள்விகளால் துளைக்க ட்ரம்ப் எல்லாப் பக்கமும் நல்லவர்களும், கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்று கூச்சலிட்டுப் பத்திரிகை சந்திப்பே களேபரத்தில் முடிந்தது. அவரது கட்சி மூத்தவர்களும், அமைச்சரவை அங்கத்தினர்களுமே குடிய ரசுத் தலைவர் இனவாதத்தை சந்தேகத்துக்கு இடமில்லாமல் எதிர்க்காதது ஏன் என எரிச்சலும் கோபமும் கொண்டனர். அடுத்த நாள் ட்ரம்ப், தான் இனவாதத்தை நியாயப்படுத்தவில்லை என்று மீண்டும் ஒரு காணொலி வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டார்.  நாடுகள், சமூகங்கள் கடந்து வெறுப்பரசியல் பொதுக் கூறுகள் உடையதாகும்.

 இந்தியாவில் இந்நிகழ்வை அரசியல் கட்சியினர் கையில் எடுக்கவில்லையென்றால் இது மொத்தமாக மூடி மறைக்கப்பட்டிருக்கும். உத்தரப்பிரதேசமும் அதன் முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்தும் பாஜக எதிர்ப்பா ளர்களால் குறி வைக்கப்படுவதாகச் சொல்லப் படுகிறது. உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள சட்டத்துக்கு எதிராக ஏன் போராட்டங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஒரு பிரச்சினையை வைத்துத் தொடர் போராட்டம் நடத்துவது முறையா என்றெல்லாம் கேள்விகள் வருகின்றன.

தேர்தல் வெற்றியின் எல்லைகள்

தேர்தலில் ஒரு கட்சி பெறும் வெற்றி, அது பலம் வாய்ந்த பெரும்பான்மையாக இருப்பினும், எதேச்சாதிகாரத்துக்கான அனுமதி அல்ல. நாடாளுமன்ற விதிகள், சட்டங்கள், அரசாட்சி, அறம் ஆகியவை அந்த எதேச்சாதிகாரத்திற்கு எதிரானவை. வெற்றி என்பது தேர்தல் அறிக்கையில் சொன்ன எல்லாவற்றுக்கும் நிபந்தனையற்ற ஒப்புதல் அல்ல. கட்சிகள் வெற்றி பெறுவது பல காரணங்களுக்காக நிகழும். கூட்டணிகள், எதிர்க்கட்சிகளின் ஓட்டு பிரிவது, பண பலம், முந்தய அரசின் மீதான அதிருப்தி, ஜாதி அர சியல், மதம் சார்ந்த அரசியல் என்று அநேகக் காரணங்கள் இருக்கும்.

இந்தியாவிலும், அமெரிக்காவிலும் - இரண்டு முக்கிய ஜனநாயக அரசுகள் - ஆளும் கட்சியினர் வெற்றி மமதையில் ஏதேனும் செய்ய முனையும்போது பெரும் மக்கள் எதிர்ப்பைச் சம்பாதித்ததுண்டு. தேர்தல் வெற்றி வெற்றுக் காசோலை அல்ல, எப்போது வேண்டுமானாலும் எழுதிக் காசாக்க.

ஆட்சியே வன்முறைகளை ஏவுவது எந்த வகையில் சரி?

பாஜகவின் ஆட்சிக்குப் பின் மசோதாக் களை நாடாளுமன்றக் குழுக்களுக்கு அனுப்பிக் கருத்துக் கேட்டு அதன் பின் நாடாளுமன்ற ஓட்டெடுப்புக்குக் கொண்டுவருவது வெகு வாகக் குறைந்துவிட்டதை ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் போக்கு என்கிறார்கள் அரசியல் பார்வையாளார்கள்.

ராமர் கோயில் பிரச்சினையை முன் வைத்து அரசியல் செய்து, பல கலவரங் களுக்கு வித்திட்டு அதன் பலனாக ஆட்சி அதிகாரத்தையும் அடைந்த ஒரு கட்சிக்கு ஏகோபித்த ஆதரவளித்தவர்கள் தற்போது தொடர் போராட்டம் நடத்துவது முறையா? என்று கேட்பது கேலிக்கூத்து. உச்சநீதிமன்றம், அரசமைப்புச் சட்டம் எதிலும் பல நியாயங்களோடு அவநம்பிக்கை கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள். அதனால்தான் நீதிமன்றம் நிறுத்திவைத்தாலும் கோரிக்கை நிறைவேறும்வரை போராட் டத்தைத் தொடர்கிறார்கள். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் யாரும் சட்டத்துக்குட்பட்டு. போராட்டம் நடத்தலாம்,  உங்களில் குற்ற மற்றவனே கல் எறியட்டும்என்பது தனி மனித விஷயங்களில் செல்லுபடியாகலாம். ஆனால், அதுவே எல்லா அநீதிகளுக்குமான அனுமதியளிப்பு அல்ல. ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மீது எல்லா அரசுகளின் கீழும் எல்லா மாநிலங்களிலும் தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. அசாமில் 1983 நெல்லி படுகொலைகள், முதல் நாட்டின் தலைநகரிலேயே சீக்கியர்கள் வேட்டையாடப்பட்டதெல்லாம் நடந்திருக்கிறது.

இவை எல்லாம் ஆட்சியினரின் தூண்டு தலால் நடந்தவை அல்ல; கிட்டத்தட்ட எல்லா நிகழ்வுகளும் தங்களை மீறி, சமூக அமைதியைச் சீர்குலைப்பவர்கள் செய்ததென்றும், அந்நிகழ்வுகள் தங்கள் கொள்கைகளுக்குப் புறம்பானவை என்றும் சம்பிரதாயத்துக்காகவாவது ஆட்சியாளர்கள் சொல்வார்கள்.

 அந்த சம்பிரதாய உணர்வுகூட இல்லாத 'பேயரசுதான்' உத்தரப் பிரதேச அரசு. மிகக் கொடூரமாக வன்புணர்வு செய்து அதைவிடக் கொடூரமாக உடல் சிதைக்கப்பட்ட பெண் ணின் வழக்கை மூடி மறைக்க நினைத்தது, கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று இஸ்லாமி யரின் படங்களைச் சுவரொட்டிகளாக ஒட் டியது, மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்ததை அம்பலப்படுத்திய மருத்துவரை வேட்டையாடியது, தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் முதல் வேட்பாளர் வரை அப்பட்டமான மதவாதப் பேச்சுகள் பேசுவது என்று உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றுச் சிறப்புகளை (?) அடுக்கிக்கொண்டே போகலாம். நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் கொஞ்சமேனும் அற உணர்வுள்ளவர்கள் மனம் கூசும் நிகழ்வுகள். பல நிகழ்வுகள் கேட்டாலே அதிரவைப்பவை,  நடுங்க வைப்பவை. எதற்கும் அரசிடமிருந்தும், ஆதரவாளர்களிடமும் எந்தப் பச்சாதாபமுமற்ற எதிர்வினைகளே பதில்கள். இப்போதுகூட ட்ரம்ப் காண்பித்த எள் முனையளவு குற்ற உணர்வைக்கூட உத்தரப்பிரதேச முதல்வரோ, பிரதமரோ காட்டவில்லை. மிக முக்கியமாக யோகி ஆதித்யநாத் மோடியின் அடுத்த வாரிசாக உருவாகலாம் என்று பாஜக ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் கணிக்கிறார்கள். ஒரு தரப்பு அப்படி நடக்க வேண்டுமே என்று விரும்புபவர்கள். இன் னொரு தரப்பு அப்படி நடந்தால், 'மொத் தமாக இந்தியாவும் தடம் புரளும்' என்று அச்சப்படுபவர்கள். உத்தரப் பிரதேசம் புதிய இந்தியாவுக்கான முன் மாதிரியாகுமோ என்பதே அம்மாநிலத்தின் மீது அத்தனை கவனமும் குவியக் காரணம்.

இந்தப் பாதக நிகழ்வில் உயிர் இழந்தோருக்கு ஆறுதல் சொல்லவும், அரசியல் காரணங்களுக்காகவும் மாநிலத்திற்கு வரும் எதிர்க்கட்சியினரைக் கைது செய்யும் மும்முரத்தில் ஒரு சதவீதம்கூடக் குற்றம் சாட்டப்படும் அமைச்சர் மகனைக் கைது செய்வதில்  காண்பிக்கவில்லை - மெத்தனமே காட்டினர். (அழுத்தம் காரணமாகவே அவர் நேற்று (9.10.2021) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்).

உத்தரப் பிரதேச மாடல்

பாஜக ஆளும் மாநில அரசுகளில் இஸ்லாமியரின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமியரும் கிட்டத்தட்ட மொத்தமாக எதிர்க்கட்சியினர்தான். அதாவது பாஜக சார்பில் இஸ்லாமியர் கிடையாது. உத்தரப் பிரதேசத்திலேயே இதுதான் நிலை. எதிர்க் கட்சியினரும் பாஜகவை எதிர்கொள்ளத் தத்தம் இஸ்லாமிய வேட்பாளர்களைக் குறைத்துக்கொள்கிறார்கள். இதெல்லாம் பாஜக வாக்காளர்களுக்கு மிகவும் உவப்பானவை. இன்னும் சொல்லப்போனால் இவைதான் குஜராத்திலும், .பி.யிலும் அக்கட்சி தொடர்ந்து வெல்வதற்கு முக்கியக் காரணங்கள். பாஜக ஊழலற்றது, பொருளாதார முன்னேற்ற கொள்கைகள் உடையது என்பதெல்லாம் கற்பனைக்கதைகள் ஆகும்

ஆக, ஏன் இப்படி ஒரு கொலை பாதகச் செயல் நடந்தேறியது?

பா...வின் எந்த ஒரு கொள்கையை எதிர்ப்பதும், மோடியை விமர்சிப்பதும் தேசத் துரோகம் என்று கட்டமைக்கப்பட்டதோடு அதனை எதிர்க்க எந்தக் குடிமகனும் எந்த முறையையும் கைக்கொள்ளலாம் என்று கட்டமைக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் யாரோ ஒருவர்  - சினிமா கொட்டகையில் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழாத ஒருவரை அடிப்பதற்குத் தனக்கு தார்மீக உரிமை இருப்பதாக நினைத்துக்கொள்கிறார். அதனால்தான் விவசாய சட்டங்களை எதிர்க்கும் பஞ்சாபியர்களை தேசத் துரோகிகள் என்று வசைபாட முடிகிறது. இத்தகைய கொடூரவன்முறையை ஆதரிக்கும் மனத் துணிவையும் இது கொடுக்கிறது. கவுரி லங்கேஷை யாரோ ஒருவர் கொலை செய்யவும் இதுதான் காரணம். இந்தியா மிக அபாயகரமானதொரு இடத்தில் நிற்கிறது என்றால் அது மிகையல்ல.

பா... ஆளும் மாநிலங்கள் மாநில அரசியலாகப் பார்க்கப்படாததற்கு இந்த பாஜகவும் தேசமும் ஒன்று என்கிற பார்வையும் காரணம். தேசிய எதிர்க்கட்சியினர் எதற்கு உத்தரப் பிரதேசத்துக்கு விரைகிறார்கள் என்று கேட்பவர்கள் அமித் ஷா ஏன் அய்தராபாத் உள்ளாட்சி தேர்தலில் அதீத கவனம் செலுத்துகிறார், தேஜஸ்வி ஏன் தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்கிறார் என்று கேட்பதில்லை. பாஜகவைப் பொறுத்தவரை நாடு முழுவதும் எல்லாத் தேர்தல்களிலும், அது முனிசிபாலிட்டி தேர்தலாக இருந்தாலும் சரி, வெற்றி பெற்றுத் தங்கள் ஹிந்துத்துவக் கொள்கைகளை நிலைநிறுத்துவதே குறிக்கோள். அதனால்தான் உத்தரப் பிரதேசமாக இருந்தாலும் மோடி மீதே விமர்சனம் குவிகிறது.

காந்தி தேசமா, கோட்சே தேசமா?

இந்தியா அடைந்திருக்கும்  வீழ்ச்சி மிக அபாயகரமானது. இந்தியா காந்தி தேசமாக இருந்த காலம் முடிவுற்றதென்றே சொல்லலாம். கோட்சேவை ஆதரிப்பவர்கள் மட்டுமல்ல, காந்திக் கொலையை மீட்டுருவாக்கம் செய்பவர்களே, அதுவும் காமிரா முன்னிலையில், ஆட்சி அதிகாரங்களில் இருக்கிறார்கள். இப்பேராபத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்கிறோம் என்கிற பெயரில் நடுநிலை வேடம் போட்டவர்கள் அனைவருமே வேடத்தைக் கலைத்து பாஜக வழியில் செல்கிறார்கள். மிகப் பெரிய ஆபத்து சூழ்ந்துள்ளது என்று இதுவரை ஜனநாயக ஆதரவாளர்கள் முழங்கிவந்ததை கண்டுகொள்ளாத மக்கள், தற்போது ஜாலியன்வாலாபாக் போன்ற ஒரு படுகொலையை நேரில் கண்ட பிறகு பதறிப்போய் நிற்கின்றனர்.

No comments:

Post a Comment