வசிப்பிடங்களுக்கு உள்ளே நிலவும் காற்றின் தன்மைக்கும், உடல் நலத்திற்கும் தொடர்பு உண்டு. அந்த வகையில், அலுவலகக் கட்டடத்திற்குள்ளே காற்றின் தரம் மோசமானால், அங்கு பணிபுரிவோரின் அறிவாற்றல் குறையும் என்கிறது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு.
உள்ளிருக்கும் காற்று விரைந்து வெளியேற வழி இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது, காற்றிலுள்ள துகள் மாசுகள் மற்றும் கார்பன்டையாக்சைடின் அளவுகள், அதை சுவாசிப்போரின் மூளைத் திறனை மட்டுப்படுத்துவது சோதனைகளில் தெரிய வந்துள்ளது.
ஹார்வர்டு விஞ்ஞானிகள், ஆறு நாடுகளில் உள்ள 40 அலுவலக கட்டடங்களில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
ஒரு ஆண்டு முழுதும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு இது.ஆய்வு நடந்த 40 அலுவலகங்களிலும், காற்றின் மாசுத் துகள்கள் மற்றும் கார்பன்டையாக்சைடு போன்ற வாயுக்களை அளந்தறியும் உணரிகள் பொருத்தப்பட்டன.
எப்போது அலுவலகத்தினுள் மாசு அதிகம் உள்ளதோ, அப்போதெல்லாம் ஆய்வில் பங்கேற்றோரின் மொபைலுக்கு சில மூளைக்கு வேலை தரும் கணக்குகள், விடுகதைகள் போன்றவை அனுப்பப்படும். எப்போதெல்லாம் அலுவலகத்திற்குள் மாசு அதிகம் இருந்ததோ, அப்போதெல்லாம் பணியாளர்களின் விடைகளின் துல்லியம் கவனிக்கத்தக்க அளவு குறைந்தது. இதனால், அலுவலக உள் காற்றின் மாசு, பணியாளர்களின் உடல்நலம், மூளைத் திறன் போன்றவை பாதிக்கப்படுவதை ஹார்வர்டு விஞ்ஞானிகள உறுதி செய்துள்ளனர்.
No comments:
Post a Comment