ஏழை! அம்பானிக்கு லண்டனில் 300 ஏக்கரில் சொகுசு பங்களா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

ஏழை! அம்பானிக்கு லண்டனில் 300 ஏக்கரில் சொகுசு பங்களா

லண்டன்,நவ.6- ஆசிய பணக்காரர்களில் ஒருவரும் இந்திய பணக்காரர்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பவருமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, லண்டனில் வாங்கி யுள்ள வீட்டை 2-ஆவது வீடாக மாற்றி வருகிறார். ரூ. 592 கோடிக்கு இந்த ஆண்டு இந்த பங்களா வாங்கப்பட்டது.

லண்டனில் பக்கிங்ஹாம் ஷயரில் அமைந்துள்ள இந்த பங்களா ஸ்டோக் பார்க் என்றழைக்கப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா பரவல் சமயங்களில் அம்பானி குடும்பத்தினர் மும்பையில் உள்ள அன்டிலியாபங்களா விலேயே தங்கியிருந்தனர். இந்த சமயத் தில்தான் வேறு இடத்தில் தங்குவதற்கு ஏற்ற இடமிருந்தால் வசதியாக இருக்கும் என்று குடும்பத்தினருக்குத் தோன்றியது. கடந்த ஆண்டு லண்டனில் வாங்கிய இந்த பங்களாவை தங்களது இரண்டாவது வீடாக மாற்றி அடிக்கடி அங்கு சென்று தங்கி வர முடிவு செய்துள்ளனர். இந்த ஸ்டோக் பார்க் பங்களாவில் 49 படுக்கை அறைகள் உள்ளன. அத்துடன் இதில் மருத்துவ வசதியும் உள்ளது.

மும்பையில் உள்ள சொகுசு பங்களாவில் அனைத்து வசதி களும் இருந்தாலும், சற்று திறந்த வெளி, தனிப்பட்ட முறையில் இருந்தால் வசதியாக இருக்கும் என்ற நோக்கில் தேடியபோதுதான் இந்த ஸ்டோக் பார்க் விற்பனைக்கு வந்தது. இதை ரூ.592 கோடிக்கு வாங்கிய பிறகு இதில் தேவையான மாற்றங்கள் செய்யும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப் பட்டது.

1908ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பங்களா, சில காலம் தனிநபரின் வீடாக இருந்தது. பின்னர் இது கேளிக்கை விடுதியாக மாற்றப் பட்டது. ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திலும் இந்த பங்களா இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பங்களாவில் உள்ள சிறிய மருத்துவ மனையில் ஒரு பிரிட்டன் மருத்துவரும் இருப்பார். இது குறித்த விவரம் எதையும் அம்பானி குடும்பத்தினர் உறுதி செய்யவும் இல்லை, கருத்து தெரிவிக்கவும் இல்லை.

No comments:

Post a Comment