முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை,நவ.28- ஒன்றிய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அரசின்எல்காட் நிறுவனம், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஅய்அய்) இணைந்து நடத்தும் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ‘கனெக்ட் 2021’ என்ற 2 நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை கிண்டியில் உள்ள அய்டிசி சோழா ஓட்டலில் 26.11.2021 அன்று தொடங்கியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத் தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது,
1996-க்கு முன்பு தமிழ்நாட்டில் 34 மென்பொருள் நிறுவனங்கள் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை திமுக அரசுதான் 666 ஆக மாற்றியது. ஒரு மாநிலத்துக்கு மிகப்பெரிய முன்னேற்றம், முதலீடுகளை கொண்டு வருவதில் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னணி வகிக்கிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டின் முன்னணி மாநிலமாக, உலக அளவில் கவனம் ஈர்க்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. நாட்டிலேயே மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. கணினி, மின்ன ணுவியல், ஆப்டிகல் தயாரிப்புகள் தயா ரிப்பில் நாட்டில் 2ஆவது இடத்திலும், எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் 3ஆவது இடத்திலும் உள்ளோம். தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சிக் கான புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி, முதல் இடத்தை தக்கவைக்க தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது.
தொழில் கொள்கை வெளியீடு
டேட்டா சென்டர்களை அமைப் பதில் தமிழ்நாடு சிறந்து விளங்கும் நிலையில், அதில் முதலீடுகளை ஈர்க்க ஒரு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, தரவுகளை அடிப்படையாக கொண்ட கொள்கை வடிவமைத்தலில், மாநிலத்தின் திறனை மேம்படுத்தும் நோக்கில், சென்னை கணிதவியல் கழகத்துடன் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தொழில் துறை, நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ப மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, புறவழிச் சாலைகள், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம், புதிய விமான நிலையம் போன்ற குறிப் பிடத்தக்க உட்கட்டமைப்பு திட்டங் களை அரசு முன்னெடுத்து வருகிறது.
முழு ஆதரவை அரசு வழங்கும்
தகவல் தொழில்நுட்பத் துறைகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவ னங்கள் பின்பற்ற வேண்டும். தொழில் களுக்கு தேவையான முழு ஆதரவை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று உறுதி அளிக்கிறேன்.
நவீன ஒற்றைச் சாளர முறை மூலம், எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்த அரசு பல சீர்திருத்தங்களை செய்து வருகிறது.
எங்களது புதிய கொள்கைகள், முன் முயற்சிகள் தமிழ்நாட்டை பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மய்யமாக மாற்றும். மாநிலத்தின் பொருளாதாரம், தொழில் துறை வளர்ச்சிக்கு தடையாக உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதில் தொழில் துறையுடன் இணைந்து செயல்படுவோம். தகவல் தொழில்நுட்பத் துறை நமது லட்சியமான 1 லட்சம் கோடி டாலர் இலக்கை அடைய உதவும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல், எல்காட் மேலாண் இயக்குநர் அஜய் யாதவ், இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா இயக்குநர் சஞ்சய் தியாகி, சிஅய்அய் தமிழக பிரிவு தலைவர் சந்திரகுமார், சிஅய்அய் கனெக்ட் தலைவர் ஜோஷ் பவுல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment