முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு - பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு - பேட்டி

தேனி, நவ.6 முல்லைப்பெரியாறு அணை பகுதியில் நீர்வளத் துறை துரைமுருகன் தலைமையில் 4 அமைச்சர்கள் நேரில் ஆய்வு மேற் கொண்டனர். முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளதாக அமைச்சர் துறைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கேரள மாநில எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 23-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்தது.

தண்ணீர் திறப்பு

இதனிடையே தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டதால் நீர்மட்டத்தை மேலும் உயர்த்த வேண் டாம் என்று கேரள அரசு வலியுறுத் தியது. மேலும், இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது அணையின் நீர்மட்டத்தை வருகிற 11-ஆம் தேதி வரை 139.50 அடியாக பராமரிக்க உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. ஆனால், நீர்மட்டம் 139 அடியை எட்டும் முன்பே அணை யில் இருந்து கடந்த 29-ஆம் தேதி கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப் பட்டது. தொடர்ந்து 8-ஆவது நாளாக நேற்றும் (5.11.2021) கேரளாவுக்கு தண்ணீர் சென்றது.

நேற்று (5.11.2021) அணையின் நீர்மட்டம் 138.80 அடியாக இருந் தது. அணைக்கு நீர்வரத்து வினா டிக்கு 6 ஆயிரத்து 117 கனஅடியாக இருந்தது. தமிழ்நாட்டுக்கு வினா டிக்கு 2 ஆயிரத்து 305 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கேரளா வுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 813 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 8 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

அமைச்சர்கள் ஆய்வு

இந்நிலையில் முல்லைப்பெரி யாறு அணையில் தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் தலைமையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் .பெரியசாமி, வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். 

முல்லைப்பெரியாறு அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, மத குகள் ஆகிய இடங்களை அமைச் சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய் தனர். பேபி அணையை பார்வையிட்டபோது அதை பலப்படுத்தும் பணிகள் குறித்தும், மதகுகளை பார்வையிட்டபோது கேரளாவுக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு குறித் தும் அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

அமைச்சர் பேட்டி

ஆய்வை முடித்துவிட்டு  அமைச் சர்கள் உள்பட அனைவரும் தேக் கடிக்கு திரும்பி வந்தனர். பின்னர் தேக்கடியில் அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில் ஒன்றிய நீர்வள ஆணையம் ஒரு புதிய விதியை கொண்டுவந்துள்ளது. அதற்கு பெயர் 'ரூல் கர்வ்’. அந்த விதியின்படி 30 ஆண்டுகள் எவ்வளவு தண்ணீர் வந்தது? எவ்வளவு நீர்மட்டம் உயர்ந்தது? என்பதை கணக்கெடுத் துள்ளனர். அந்த கணக்கெடுப்பின் படி அணையின் நீர்மட்டம் எந் தெந்த காலகட்டத்தில் எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என அட் டவணை கொடுத்துள்ளனர்.

அப்படி பார்க்கும்போது முல் லைப்பெரியாறு அணையில் இன் றைய நிலவரப்படி 139.50 அடி நீர் மட்டம் வைக்க அனுமதிக்கப்பட்டுள் ளது. நவம்பர் 30-ஆம் தேதி 142 அடி உயர்த்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் தான், தண்ணீர் திறந்துள்ளோம். 1979-ஆம் ஆண்டில் அணை பலவீனமாக இருக்கிறது என்றும், பலப்படுத்த வேண்டும் எனவும் கூறினர். அதையடுத்து 3 நிலைகளில் பலப்படுத்தும் பணி நடந்தது. பின்னர் நீர்மட்டத்தை152 அடியாக உயர்த்த வேண்டும் என நீதிமன்றம் சென்றோம்.

பேபி அணை

பேபி அணையை பலப்படுத்தி விட்டு நீர்மட்டத்தை 152 அடியாக நிலைநிறுத்தி கொள்ளலாம் என நீதிமன்றம் கூறியது. அந்த பேபி அணையை பார்வையிட்டேன். அதில் என்ன பிரச்சினை என்றால், அந்த அணைக்கு கீழே 3 மரங்கள் இருக்கின்றன. அந்த மரங்களை அகற்றினால் பலப்படுத்தும் பணி நடத்த முடியும். கேரள அரசை கேட்டால், வனத்துறையிடம் கேட்க வேண்டும் என்கின்றனர். வனத்துறையை அணுகினால் ஒன்றிய வனத்துறையை அணுக கூறுகின்றனர். விரைவில் அந்த 3 மரங்களை அகற்றிவிடுவோம். அகற்றிவிட்டால் பேபி அணையை பலப்படுத்தி நீர்மட்டத்தை 152 அடி உயர்த்தலாம்.

அணையில் இருந்து தமிழ்நாட் டுக்கு கூடுதலாக தண்ணீர் எடுப்பது குறித்து இருமாநில அரசுகளும் பேசி தான் முடிவெடுக்க வேண்டும்.

 புதிய அணை தேவையில்லை

பின்னர் அமைச்சர் துரைமுருகன் காரில் ஏறி புறப்பட முயன்றபோது அவரிடம், கேரள அரசு புதிய அணை கட்டப்போவதாக கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், உச்சநீதிமன்ற  உத்தரவுப்படி முல் லைப்பெரியாறு அணையை பல் வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் பார்வையிட்டு அணை பலமாக இருப்பதாக கூறியுள்ளனர். எனவே முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட தேவையில்லை என்றார்.

No comments:

Post a Comment