கவுகாத்தி, நவ.3 ஜீன்ஸ் போட்டு வந்த காரணத்திற்காக, பெண் ஒருவரை, கைப்பேசி உதிரிபாகக் கடையின் உரிமையாளர் அடித்து தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கவுகாத்தியிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிஸ்வநாத் சைராலி என்ற ஊரில் நூருல் அமீன் என்பவர் கைப்பேசி உதிரிபாகக் கடை வைத்துள்ளார். இந்தக் கடைக்கு சம்பவத்தன்று ஒரு பெண் செல்போன் உதிரிபாகம் ஒன்றை வாங்க வந்துள்ளார். அவர் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மேற்சட்டை அணிந்திருந்தார்.
அவரது உடையைப் பார்த்த கடை உரிமையாளர் நூருல் அமீன், அப்பெண்ணை திட்டியுள்ளார். அத்தோடு இல்லாமல் அவருடன் இருந்த மேலும் 2 பேரும் திட்டியுள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து தாக்கி அவரை வெளியே தள்ளியுள்ளனர். தகவல் அறிந்து அப்பெண்ணின் தந்தை வந்து நியாயம் கேட்டபோது அவரையும் இவர்கள் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை கூறுகையில், "எனது மகள் ஜீன்ஸ் போட்டிருந்தார் என்பதற்காக அவர் கேட்ட பொருளைத் தர மறுத்ததோடு தரக்குறைவாக பேசி தாக்கியும் உள்ளனர்.
நாங்கள் அசாமில்தான் பிறந்து வளர்ந்தோம். அசாம் கலாச்சாரத்தைத்தான் பின்பற்றி வருகிறோம். எனது மகள் பி.சி.ஏ. படிக்கிறார். அரசுப் பள்ளியில் அவர் படித்தவர். அசாமி கலாச்சாரம்தான் அவருக்குத் தெரியும். ஆனால் இங்கு தலிபான் முறையை பின்பற்றி பெண்களை ஒடுக்கப் பார்க்கின்றனர்" என்றார்.
சம்பந்தப்பட்ட பெண் கூறுகையில், "நான் கடைக்குப் போயிருந்தபோது நான் ஜீன்ஸ் அணியக் கூடாது என்று அங்கிருந்த முதியவர் (கடை உரிமையாளர் நூருல் அமீன்) கூறினார். நான் இதே உடையில் அவரது வீட்டுக்குப் போனால் அவரது மருமகள் கெட்டுப் போய் விடுவார்" என்று கூறி என்னைத் தாக்கி வெளியே தள்ளினர்" என்றார். தற்போது நூருல் அமீன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment