‘திராவிட மாடல் ஆட்சி' எப்படி இருக்கும் என்பதை உலகுக்குப் பிரகடனம் செய்தவர் முதலமைச்சர் கலைஞர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

‘திராவிட மாடல் ஆட்சி' எப்படி இருக்கும் என்பதை உலகுக்குப் பிரகடனம் செய்தவர் முதலமைச்சர் கலைஞர்!

 ‘‘திராவிடர் ஆட்சி'' வெறும் காட்சிக்காக அல்ல - மனித உரிமைக்கானது - மாட்சிக்குரியது என்பதை

உலக வரலாற்றில் பதிய வைத்துள்ளார் முதலமைச்சர் மு..ஸ்டாலின்!

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் - தொடரட்டும் அமைதிப் புரட்சி!

சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' முதல மைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் ஆட்சி - திராவிடர் ஆட்சி - வெறும் காட்சிக்காக அல்ல; மனித குலத்தின் உரிமைக்கான மீட்சிக்கானது; எனவே, மாட்சிக்குரியது என்பதை இன்றைய முதலமைச் சரின் பொற்கால ஆட்சி உலக வரலாற்றில் பதிய வைத்துள்ளது. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் - தொடரட்டும் அமைதிப் புரட்சி! என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

செங்கற்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பூஞ்சேரி கிராமம் அருகே உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றஅன்னதான' விருந்தில் கலந்துகொள்ள நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த பெண்ணுக்கு, உண்ணல் உரிமை மறுக்கப்பட்டதை அறிந்த முதலமைச்சரும், அறநிலையத் துறை அமைச்சரும் வேதனைப்பட்டதோடு, அதே இடத்தில் ஒரு பொது விருந்து ஏற்பாடு செய்யப் பட்டு, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அதே சகோதரியை அழைத்து, தனது பக்கத் திலேயே அமர்த்தி, உடன் உண்ணச் செய்த உன்னத சமத்துவ நடவடிக்கை அவர்செயல்பாபு' என்பதை நிரூபித்தது!

என்றும் காணாதவசந்தத்தை' உருவாக்கி - மகிழ்ச்சிக் கடலில் நீந்தச் செய்தார்!

நேற்று (4.11.2021) அதே கிராமத்திற்குச் சென்று நமது முதலமைச்சர்சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' மு.. ஸ்டாலின் அவர்கள், அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களுடன் சென்று, நரிக்குறவர், இருளர் ஆகிய மக்கள் வாழும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு  இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கி, அவர்கள் வாழ் வில் என்றும் காணாதவசந்தத்தை' உருவாக்கி தானும் மகிழ்ந்து, அவர்களையும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தச் செய்தார்!

‘‘திராவிடம் என்றால் சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் என்பதோடு, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை நெஞ்சில் சுமந்து, இத்தகைய இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல் முதல் அவர்தம் வாழ்வில் ஒளியேற்றும் நிகழ்வை நடத்தி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆட்சிப் பொறுப்பு அதற்காகத்தான்'' என்று முத்தாய்ப்பான கருத்துகளைக் கூறி ஓர் அமைதிப் புரட்சியை நிகழ்த்தியுள்ளார் நமது முதலமைச்சர்.

மறுக்கப்பட்டது உணவல்ல - மரியாதை!

அதுமட்டுமா? நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த பெண்கள், தங்கள் இல்லங்களுக்கு வந்து பார்க்கும்படி விடுத்த அழைப்பை உடனடியாக ஏற்று அங்கே சென்று அவர்தம் அன்றாட வாழ்வுபற்றியெல்லாம் விசாரித்து அவர்தம் கஷ்ட நஷ்டங்களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘அச்சகோதரிக்கு -  அச்சமூகத்திற்கு மறுக்கப்பட்டது உணவல்ல; மரியாதை'' என்ற சொற்றொடர்கள் சுரீ ரென்ற சுயமரியாதைச் சூடு!

‘‘எக்காலத்திலும் இப்படிப்பட்ட உரிமைகள் எங் களுக்குக் கிடைக்கும் என்று கனவிலும் நாங்கள் நினைக்கவில்லை'' என்று பெருமிதத்தோடு, கண்ணீர் மல்க நரிக்குறவர், இருளர் சமூக சகோதரிகள் நெகிழ்ந்து கூறியுள்ளனர்!

வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டி விட்டார்!

உண்மையான மக்களாட்சி என்றால், அது கடைக் கோடி மக்களுக்கும் உரிமையை வழங்கி, உன்னத நிலைக்கு உயர்த்துவதே என்ற இலக்கணத்தை நமது முதலமைச்சர் செயலில் காட்டி, திராவிட ஆட்சி எப்படிப் பட்டது என்ற வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டி விட்டார்!

பிறவி பேதம் கற்பித்து, அம்மக்களை குற்றப்பரம் பரை' (Criminal Tribes) என்று அழைக்கப்பட்ட கொடு மையை எதிர்த்து, நடந்த நீண்ட போராட்டத்தில், மதிப் புமிகு முத்துராமலிங்கத் தேவர் போன்ற தலைவர்களின் பங்கும், நீதிக்கட்சி ஆட்சியின் பங்களிப்பும் பெரிதாகும்.

உழைக்கும் வர்க்கமான அம்மக்களுக்கு ஒரு காலத்தில் வேலை கிட்டாத நிலையில், போதிய வருமானம் இல்லாது - பசி, பட்டினி, பஞ்சத்தால் வாடியது காரணமாக சில நேரங்களில் குற்றங்களை இழைக்கத் தூண்டியிருக்கலாம். அது அவர்கள் குற்றமல்ல; சமூகத் தின், அக்கால வெள்ளை ஆட்சியும், பேதத்தையும் விதைத்த ஆரிய மனுதர்மமுமே காரணமாகும்!

திராவிட மாடல் ஆட்சி எப்படி இருக்கும்' என்பதை உலகுக்குப் பிரகடனம் செய்தார் கலைஞர்!

குற்றப்பரம்பரையினர் - C. T. (Criminal Tribes)  என்ற முத்திரை குத்தப்பட்டு, அவர்கள் ஒவ்வொரு நாளும் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்துப் போட்டு - இரவு முழுவதும் அங்கேயே படுத்துக் கிடக்கவும்கூட சிற்சில நேரங்களில் - பல இடங்களில் நடத்திய கொடுமை மிகுந்த ஏற்பாடு - அதனை எதிர்த்த இயக்கம் திராவிடர் இயக்கம் - திராவிட ஆட்சி. சுயமரியாதை உணர்வு அச்சமூக மக்களுக்கு ஏற்பட்டு, எதிர்ப்புரட்சி நடத்திய வரலாறு  (மதுரைபற்றி இதழாளர் திருமலை எழுதிய நூல் ஆதாரம்) -  வரலாறு.

அதன் தொடர்ச்சிதான் இன்றைய திராவிடர் ஆட்சி.

முன்பு நமது கலைஞர் முதலமைச்சராகப் பொறுப் பேற்றபோது, செய்த மாறுதல்களால் மானங்காக்க - ‘‘குற்றப்பரம்பரையினர்'' என்ற இழிபெயரை மாற்றி, அரசு குறிப்புகளில் சீர்மரபினர்' என்று அழைக்கும் சுயமரியாதையை, சமத்துவத்தை உருவாக்கிதிராவிட மாடல் ஆட்சிஎப்படி இருக்கும்; இருக்கவேண்டும் என்பதை உலகுக்குப் பிரகடனம் செய்தார்!

1924 இல் சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) .வே.சு.அய்யர் தொடங்கிய தேசிய குருகுலத்தில் மாண வர்களிடையே - பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பேதப்படுத்தப்பட்டு, ஒரு ஜாதி ஒழிப்புக்கான புரட்சி முளை விட்டது!

தந்தை பெரியார், டாக்டர் வரதராஜூலு, திரு.வி.. போன்றவர்கள் காங்கிரசில் இருந்து ஜாதிக்கு எதிராக நடத்திய அறப்போரே உடன் உண்ணல் உரிமைக்கானது (1924 இல்).

அதன் மற்றொரு வெற்றி முகமே மேற்காட்டிய நிகழ்வுகள்.

வாழ்த்துகள் - தொடரட்டும் அமைதிப் புரட்சி!

இவ்வாட்சி - ‘திராவிடர் ஆட்சி' - வெறும் காட்சிக்காக அல்ல; மனித குலத்தின் உரிமைக்கான மீட்சிக்கானது; எனவே, மாட்சிக்குரியது என்பதை இன்றைய முதலமைச்சரின் பொற்கால ஆட்சி உலக வரலாற்றில் பதிய வைத்துள்ளது.

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் - தொடரட்டும் அமைதிப் புரட்சி!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

5.11.2021

No comments:

Post a Comment