மும்பை, ஜன.5 நாடு முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 261 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் பதிவாகும் பல்வேறு குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவண அமைப்பு (என்சிஆர்பி) ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்த வகையில் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த 2020ஆம் ஆண்டில் பதிவான குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 261 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக 116 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும்குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
மகாராட்டிராவில் அதிகபட்சமாக 207 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த மாநிலத்தில் 2019ஆம் ஆண்டில் பதிவான 70 வழக்குகளுடன் ஒப்பிடும்போது இது 196 சதவீதம் அதிகம் ஆகும். 2019இல் முதலிடத்தில் இருந்த உத்தரப்பிரதேசம் 2020இல் 197 வழக்குகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது. கர்நாடகா (144), கேரளா (126), ஒடிசா (71), ஆந்திரா (52) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இதுகுறித்து இத்துறை சார்ந்தநிபுணர்கள் கூறும்போது, “ஊரடங்கு காலத்தில் இணைய தளங்களை குழந்தைகள் பார்ப்பது அதிகரித்துள்ளது. அத்துடன், குழந்தைகள் தொடர்பான ஆபாச காட்சிப்பதிவுகளும் அதிக அளவில் உருவாகி உள்ளன. இதில் பெரும்பாலான காட்சிப்பதிவுகளை சம்பந்தப்பட்ட குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு தெரிந்த நபர்களே பதிவு செய்துள்ளனர்” என்றனர்.
No comments:
Post a Comment