சென்னை, பிப்.27 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி. ராமச்சந்திரன் சந்தித்து, ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். தலைமைச் செயலாளர் இறையன்பு உடனிருந்தார்.
இதுகுறித்து தா.கி. ராமச்சந்திரன் கூறும்போது, கரோனாபெருந்தொற்றை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளை முடுக்கி விட வேண்டிய அவசியத்தை கருதி,வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தேவைகளை உணர்ந்தும் ரூ.40.5 லட்சம் செலவில் உபகரணங்களும், ரூ.17.5 லட்சம் செலவில் மருந்துகளும், ரூ.1.5 லட்சம் மதிப்பில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
மேலும், பிரதமரின் நிவாரணநிதிக்காக ரூ.2 கோடியும், தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்காக ரூ.50 லட்சமும் துறைமுகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை பிரதமரின் நிவாரண நிதிக்காக ரூ.14.79 லட்சத்தை வழங்கி உள்ளனர் என்றார் அவர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்
மாத்திரைகள் கையிருப்பு இல்லாததால்
பணம் கொடுத்து வாங்கும் ஏழை மக்கள்
புதுச்சேரி, பிப்.27 புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.
கரோனா அச்சுறுத்தலால் கடந்தஇரு ஆண்டுகளாக இங்கு வெளிப்புறச் சிகிச்சைகள் தொடர்ச்சியாக தரப்படவில்லை. தொலைபேசியில் முன்பதிவு செய்து அதன்பிறகே சிகிச்சைக்கு வரவேண்டிய நிலை இருந்தது. தற்போதுதான் நீண்ட மாதங்களுக்குப் பின், வெளிப்புற சிகிச்சைகள் முழுமையாக செயல்படுகிறது.
அதேபோல், கடந்த இரு ஆண்டுகளாக தொற்றா நோய்களான நீரிழிவு, மனநோய், இதய நோய், நரம்பியல், இதய அறுவை சிகிச்சை நோயியல், நரம்பு அறுவை சிகிச்சை நோயியல், சிறுநீரகவியல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் ஆகியவற்றுக்கு சிகிச்சையில் உள்ளோருக்கும் மாதந்தோறும் இலவசமாக தரவேண்டிய மருந்து மாத்திரைகள் நிறுத்தப்பட்டன. தற்போது மீண்டும் மாத்திரைகளை தருவதாக ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருவோருக்கு அத்தியாவசிய மாத்திரைகள் கையிருப்பில் இல்லை என்று கூறுகின்றனர். இதய நோய்க்கு விழுப்புரத்தில் இருந்து சிகிச்சைக்கு வந்த விவசாயி ஒருவர்கூறுகையில், “இதய பிரச்சினையால் சிகிச்சைக்கு வந்தேன். மாத்திரை வாங்க சென்றபோது இல்லைஎன்று கூறிவிட்டனர். அதே நேரத்தில் மாத்திரை தந்ததாக குறித்து கொள்கின்றனர். மாத்திரையை வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு கூறுகின்றனர்” என்றார். இவரைப் போல் பலர் மாத்திரை கிடைக்காமல் தவிப்பதை காண முடிந்தது.
ஜிப்மர் வட்டாரங்களில் விசாரித்தபோது, “மாத்திரை தட்டுப்பாடு உள்ளது. சாதாரண வைட்டமின் மாத்திரை தொடங்கி 37 அத்தியாவசிய மாத்திரைகள் தற்போது கையிருப்பில் இல்லை. தொற்றா நோய்களில் தொடர் சிகிச்சையில் மனநோய், புற்றுநோய் தொடங்கி பல பிரிவுகளில் ஏராளமான ஏழை நோயாளிகள் மாதந்தோறும் மருந்து வாங்க வந்து, ஏமாற்றத்துடன் செல்கின்றனர். அதே நேரத்தில், ஜிப்மர் வளாகத்தில் பணம் செலுத்தி வாங்கும் பார்மசிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. “ என்றனர்.
No comments:
Post a Comment