- பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன்
“நீட்”டை வலிந்து திணிக்கின்றார் - தமிழர்
நெஞ்சில் நெருப்பைக் கொட்டுகிறார்!
வாட்டி வருத்த நினைக்கின்றார் - நல்
வாழ்வின் மேன்மை தடுக்கின்றார்!
முன்னர் நுழைந்த குலக்கல்வி - முக
மூடியை அணிந்து வருகிறது!
என்றும் நஞ்சாம் மனுதருமம் - நம்
இனத்தை அழிக்கப் பாய்கிறது!
இடஒதுக் கீட்டை எதிர்க்கின்றார் - இங்கே
ஏழைகள் படிப்பதை வெறுக்கின்றார்!
மடமை நோயில் உழல்பவரோ - தமிழ்
மாண்பை மரபை அழிக்கின்றார்!
அனிதா தொடங்கி இருபதின்மர் - நீட்டால்
ஆருயிர் தன்னை இழந்திட்டார்!
துணிந்து பொய்யை விதைக்கின்றார் - நாட்டைத்
துயரக் கடலில் ஆழ்த்துகிறார்!
பொய்யும் புரட்டும் வெல்லாது - வட
புலத்தோர் சூழ்ச்சி பலிக்காது
மெய்யாய் அரசியல் சட்டத்தை - நாளும்
மிதித்தே வன்கொலை செய்கின்றார்!
குமரி தொடங்கிச் சென்னைவரை - அய்யா
கொள்கைப் பரப்புரை மேற்கொண்டார்!
நமது ஆசிரியர் முழக்கத்தால் - நாட்டில்
நாளை மலரும் பொன்விடியல்!
இறந்து விட்ட சமற்கிருதம் - என்றும்
எதற்கும் உதவா இந்தியினைக்
கரவாய் நுழைக்க முயல்கின்ற - தீய
கயமை நாடகம் அறிவோமே!
மாநில உரிமை பறிக்கின்றார் - இன
மான வாழ்வைத் தகர்க்கின்றார்!
யானெனும் செருக்கில் ஆடுகிறார் - நாம்
யாண்டும் ஏற்கோம்! வெல்வோமே!
No comments:
Post a Comment