'கியூட்' நுழைவுத் தேர்வு எதிர்ப்பு சட்டமன்றத் தீர்மானம்: கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 11, 2022

'கியூட்' நுழைவுத் தேர்வு எதிர்ப்பு சட்டமன்றத் தீர்மானம்: கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை!

மக்கள் பாராட்டை நன்றியுடன் பிரதிபலிப்பதாகும்!

கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு ஆகியவற்றைப் படிக்கக்கூட, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படமாட்டாது; அதற்கென தனியே ஒரு 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வோ, 'கியூட்' போன்ற தேர்வோ கூடாது; அது நமது பிள்ளைகள் கல்லூரி, பல்கலைக் கழகக் கல்வி பெறுவதற்கு மிகப்பெரும் தடைக்கற்கள்  - கண்ணிவெடிகள் என்பதை நன்கு புரிந்த சமூகநீதிக்கான சரித்திர நாயகரான தமிழ்நாடு முதலமைச்சர் கண்டித்து அறிக்கை விடுத்ததோடு நிற்காது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (11.4.2022) ஒரு தீர்மானத்தையே ஒருமனதாக நிறைவேறும்படிச் செய்து, அனைத்துக் கட்சியின் (அ.தி.மு.க. உள்பட) ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது வரவேற்கத்தகுந்ததோடு, பாராட்டப்படவும் வேண்டிய அருஞ்செயலாகும்.

பா.ஜ.க.எதிர்த்துப் பேசி, வாதங்களை முன்வைக்க சரக்கு இல்லாத காரணத்தினால் என்னவோ வெளி நடப்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

நாம் நாடு தழுவிய பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கில் மக்களைச் சந்தித்து விளக்கம் அளிக்கும் நிலைக்கு இந்தத் தீர்மானம் மக்களின் உணர்வைப் பிரதிபலிப்ப தாகும் - அருமையான எடுத்துக்காட்டு. 

இதற்காகவே மத்தியப் பல்கலைக் கழகங்கள் அமைந்திருக்கும் திருவாரூரிலும் (31.3.2022), புதுச்சேரி யிலும் இன்று (11.4.2022)  திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதென்பதும் குறிப்பிடத்தக்க தாகும்.

நாளை சென்னையிலும் திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திட உள்ளது (12.4.2022).

தக்க நேரத்தில் உடனடியாக தீர்மானம் நிறை வேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி கலந்த பெற்றோர்களின் பாராட்டுகள் கிடைக்கின்றன என்பதும் வெள்ளிடை மலை.



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
 11.4.2022

No comments:

Post a Comment