நியாயவிலைக் கடைகளில் 4,500 பணியாளர்கள் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

நியாயவிலைக் கடைகளில் 4,500 பணியாளர்கள் நியமனம்

சென்னை, செப்.29 ரேசன் கடைகளில் காலியாக உள்ள 4,500 ஊழியர் பணியிடங்கள் டிசம்பர் மாதத்துக்குள் நிரப் பப்படும் என அமைச்சர் அய்.பெரியசாமி கூறினார்.  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் அய்.பெரியசாமி தலைமையில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடன் ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று (28.9.2022) நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர் சங்கர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

கூட்டத்துக்கு பின் அமைச்சர் அய்.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு 10 ஆயிரத்து 292 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக பயிர்க்கடன் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். இதுவரை பயிர்க்கடனாக ரூ.4 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

நகைக் கடன் தள்ளுபடி

நகைக்கடனை பொறுத்தமட்டில் மொத்தம் ரூ.4,900 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ரூ.100 கோடி மட்டும் தள்ளுபடி செய்ய வேண்டி உள்ளது. இதனை துரிதமாக வழங்கிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கிராமப்புற ஏழைகளுக்கு கடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை பன்முகத்தன்மையுடன் செயல்படும் வகையில் மாற்றி வருகிறோம். இதுவரை 400 வங்கிகளை மாற்றி உள்ளோம். மீதமுள்ள 1,500 வங்கிகள் விரைவில் மாற்றப்படும். கிராமப்புற பொருளா தாரத்தை முன்னிலைப்படுத்தும் வகை யில் கிராமப்புற ஏழைகளுக்கு ஆடு, மாடு, கோழி, மீன் வளர்க்க வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ரூ.600 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ஒன்றிணைத்து செயல்படுத்தும் வகையிலான கோர் பாங்கிங் வசதியை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் யு.பி.அய். வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வங்கியில் கூகுல்பே, பேடிஎம். போன்ற வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன் படுத்தி கொள்ளலாம்.  இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.

ரேசன் கடைகளில் பணியிடங்கள்...

 தமிழ்நாடும் முழுவதும் நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்து 500 விற்பனையாளர், எடை யாளர் பணியிடங்களை நிரப்புவதற் கான அரசாணை வெளியிடப்பட்டுள் ளது. டிசம்பர் மாதத்துக்குள் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். வெளிப்படைத் தன்மை யுடன் சட்ட திட்டங்கள், விதி முறைகளுக்கு உட்பட்டு இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். தகுதியானவர் கள் இந்த பணியிடங்களில் நியமிக்கப்படு வர். எந்த சிபாரிசும் ஏற்றுக்கொள்ளப் படாது. 

சென்னை உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் வசிக்கும் ஏழைகள், வெளிமாநில தொழிலாளர்கள் பலர் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் எரிவாயு இணைப்பு பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு நகர்ப்புற கூட்டுறவு சங்கத்தின் மூலம் 2 மற்றும் 5 கிலோ எடையுள்ள சிறிய சமையல் எரிவாயு உருளைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.  

ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளது. ரேசன் அரிசி கடத்துப வர்கள் யாராக இருந்தாலும் பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்தது. விவசாய கடன் வழங்குவதில் முறைகேடு நடப்பதை தடுக்கவும், தகுதியான விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதை உறுதி செய்யவும் விதிமுறைகள் உரு வாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment